UAE: குடியிருப்பாளர்களுக்கு கொரியர் நிறுவனங்களிடம் இருந்து வரும் போலி SMS.. எச்சரிக்கும் காவல்துறை..!!

பிரபலமான நிறுவனத்தின் பெயரைக் கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி கும்பல் எல்லா நாடுகளிலும் இருப்பது போலவே அமீரகத்திலும் இது போன்ற மோசடி வேலைகள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சமீப காலமாக ஷிப்பிங் நிறுவனங்களின் பெயரில் மோசடி செய்து பணம் பறிக்கும் வகையில் குடியிருப்பாளர்களுக்கு ஃபோன் கால், மெசேஜ் என வந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இது போன்றவர்களிடம் இருந்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அஜ்மானில் உள்ள அதிகாரிகள் கூறுகையில், ஷிப்பிங் நிறுவனங்களின் பெயரில் மோசடி செய்யும் நபர்கள், குடியிருப்பாளர்களின் தனிப்பட்ட தகவல்களைப் புதுப்பித்து கட்டணம் செலுத்துமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். அதாவது ஷிப்பிங் நிறுவனங்கள் பெயரில் மோசடி செய்யும் நபர்கள், குடியிருப்பாளர்களுக்கு வரவிருக்கும் பார்சல் டெலிவரி செய்ய முடியாமல் இடையில் சிக்கியிருப்பதாகவும் இதனை சரிசெய்ய ஒருவர் தங்கள் தனிப்பட்ட தகவல்களைப் புதுப்பித்து கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் மெசேஜ்களை அனுப்புவதாக, அஜ்மான் காவல்துறை தெரிவித்துள்ளது.
இது பற்றி கூறுகையில் “ஷிப்பிங் நிறுவனங்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்து அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்குப் பதிலளிக்க வேண்டாம். உங்களின் ஷிப்மென்ட்கள் இடையில் மாட்டிக்கொண்டு இருப்பதாகவும், இதற்கான உங்கள் டேட்டாவைப் புதுப்பிக்கவும், கட்டணம் செலுத்தவும் என்று வரும் மெசேஜ்களுக்கு பதிலளிக்க வேண்டாம். இது போன்ற மோசடி வலையில் சிக்குவதைத் தவிர்க்கவும்” என்று அஜ்மான் காவல்துறை தெரிவித்துள்ளது.
அமீரகத்தில் ஏராளமான குடியிருப்பாளர்கள் ஷிப்பிங் நிறுவனங்கள் எனக் கூறி நிறுவனங்களிடமிருந்து குறுஞ்செய்திகளைப் பெறுகிறார்கள் மற்றும் இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் தங்கள் தனிப்பட்ட தகவலைப் புதுப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் காவல்துறை, உள்துறை அமைச்சகம் அல்லது குடியிருப்பாளர்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கியைப் போல ஆள்மாறாட்டம் செய்து, UAE PASS கோரிக்கைகளை அங்கீகரிக்கச் சொல்லி குடியிருப்பாளர்களிடம் முக்கியமான மற்றும் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் மோசடி செய்பவர்கள் சமீபத்திய விஷிங் (வாய்ஸ் ஃபிஷிங்) மூலம் மக்களை ஏமாற்றுவதற்கு புதுமையான வழிகளை வகுத்துள்ளனர். எனவே குடியிருப்பாளர்கள் இது போன்ற மோசடிகளில் சிக்கிக்கொள்ளாமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel