அமீரக செய்திகள்

விரைவில் துவங்கவிருக்கும் ‘துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல்’… தேதியை அறிவித்த நிர்வாகம்..!!

துபாய் குடியிருப்பாளர்களால் வருடந்தோறும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் (DSF) 30வது ஆண்டு பதிப்பு வருகின்ற டிசம்பர் 6, 2024 அன்று தொடங்கி ஜனவரி 12, 2025 வரை நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து துபாய் ஃபெஸ்டிவல்ஸ் ரீடெயில் எஸ்டாப்ளிஷ்மென்ட் (DFRE) வெளியிட்டுள்ள அறிக்கையில், துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் சமீபத்திய பதிப்பானது, முதன்முதலாக 1996 இல் DSF தொடங்கப்பட்டதிலிருந்து  ஃபெஸ்டிவலின் வரலாற்றில் மிகவும் பிரம்மாண்ட சீசனாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, லைவ் கச்சேரிகளின் வரிசையில் பிரபலமான 321 ஃபெஸ்டிவல், மார்க்கெட் அவுட்சைட் தி பாக்ஸ் (MOTB) எனப்படும் வெளிப்புற பாப்-அப் நிகழ்வுகள் மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட உலகளாவிய மற்றும் உள்ளூர் பிராண்டுகளின் “எப்போதும் இல்லாத மிகப்பெரிய” ஷாப்பிங் டீல்களான கேண்டீன் X ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, புத்தாண்டு கொண்டாட்டங்கள், அத்துடன் தீம் பூங்காக்களில் சாகசங்கள், வெளிப்புற சாகசங்கள், கடற்கரையோர இடங்கள் மற்றும் பரிசுகளுக்கான வாய்ப்புகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், DSF நடைபெறும் 38 நாட்களில் ஒவ்வொரு இரவும் காட்சிகள், வண்ணங்கள் மற்றும் விளக்குகளுடன் துபாய் வானத்தை ஒளிர வைக்கும் துபாய் லைட்ஸ், வானவேடிக்கைகள், தினசரி ட்ரோன் நிகழ்ச்சிகளை இலவசமாகப் பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, DSF நிகழ்வுகளின் முழு காலெண்டர் விரைவில் வெளியிடப்படும் என்று DFRE தெரிவித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!