திருச்சி-அபுதாபி விமான சேவையை நிறுத்தும் இண்டிகோ..!! பயணிகள் ஏமாற்றம்..!!

இந்தியாவைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் திருச்சி-அபுதாபி வழித்தடத்தில் கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்திற்கு நான்கு விமானங்கள் என இயக்கப்பட்டு வரும் நிலையில் நான்கு வாராந்திர விமானங்களையும் வருகின்ற அக்டோபர் 25-ம் தேதியுடன் நிறுத்தவுள்ளதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில் செயல்பாட்டு காரணங்களால் சேவையை இடைநிறுத்துவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயணிகளிடையே அதிகரித்த தேவையின் காரணமாக, கடந்த ஆகஸ்ட் 11, 2024 அன்று இண்டிகோ விமான நிறுவனம் திருச்சி-அபுதாபி செக்டாரில் விமானச் சேவையைத் தொடங்கியது. ஆனால், இப்போது விமானச் சேவை தொடங்கிய இரண்டு மாதங்களில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது இந்த வழித்தடமதை பயன்படுத்தும் பயணிகளுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு, மங்களூரு மற்றும் லக்னோ உட்பட நாட்டின் 13 விமான நிலையங்களில் இருந்து அபுதாபிக்கு விமானங்களை இயக்கும் அதே வேளையில், திருச்சி, அபுதாபி இடையே செல்லும் விமானங்களை இப்போது நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.
விமான நிறுவனத்தின் இந்த அறிவிப்பானது, அடிக்கடி பயணிப்பவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது என்று விமானப் போக்குவரத்து ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும், திருச்சி-அபுதாபி வழித்தடத்தில் உள்வரும் விமானங்களை விட வெளிச்செல்லும் விமானங்கள் அதிக பயணிகளை பதிவு செய்வதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், துபாய் மற்றும் ஷார்ஜாவுடன் ஒப்பிடும்போது அபுதாபி செக்டருக்கான கட்டணம் சற்று அதிகமாக இருப்பதால், பயணிகள் பெரும்பாலும் துபாய் அல்லது ஷார்ஜாவுக்குப் பறந்து பின்னர் சாலை வழியாக அபுதாபியை அடைவதைத் தேர்வு செய்வதாகவும், இதுவே விமான நிறுவனம் அதன் சேவைகளை நிறுத்துவதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் பயண ஆப்பரேட்டர்கள் கூறுகின்றனர்.
இண்டிகோவின் அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் “செயல்பாட்டுக் காரணங்களுக்காக” அக்டோபர் 25 முதல் நான்கு விமானச் சேவைகள் இடைநிறுத்தப்படுவதாக உறுதிப்படுத்தியுள்ள நிலையில், சேவைகளை மீண்டும் தொடங்குவது பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel