அமீரக செய்திகள்

அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் லேசான மழை மற்றும் தூசிப்புயல்..!! நாளையும் தொடருமா??

ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை லேசான மழைப்பொழிவு பதிவாகியதுடன், நாடு முழுவதும் தூசியுடன் காற்றும் வீசியது. இதனால் சாலைகளில் தெரிவுநிலை குறைந்து காணப்பட்டதால் வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு ஆளானதுடன், தெருக்களில் நடந்து சென்றவர்களும் சற்று சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த சீரற்ற வானிலை தொடர்பாக அமீரகத்தின் தேசிய வானிலை மையம் (NCM) வெளியிட்ட அறிக்கையில், இன்று காலை, அபுதாபியின் அல் பத்தீன் பகுதியில் லேசான மழை பெய்ததாகவும், அதைத் தொடர்ந்து இன்று பிற்பகல், அல் கைல், ராஸ் அல் கைமா, ஃபுஜைரா மற்றும் டிப்பா உள்ளிட்ட பல பகுதிகளில் லேசான மழை பெய்ததாகவும் அறிவித்துள்ளது.

முன்னதாக, அல் சுயோ, ஷார்ஜா, ராஸ் அல் கைமா மற்றும் உம் அல் குவைன் ஆகிய இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகியது. அதே நேரத்தில் துபாய் சர்வதேச விமான நிலையமும் துபாயில் அல் மினாத்தும் லேசான மழையை அனுபவித்ததாகவும் அமீரகத்தின் தேசிய வானிலை மையம் கூறியுள்ளது.

இதற்கிடையில், இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட  வீடியோ ஒன்றில், இன்று பிற்பகல் வடமேற்கு துபாயில் காற்றுடன் கூடிய தூசி நிறைந்த நிலைமைகளையும் காணமுடிகிறது. முன்னதாக, புழுதிப் புயல் காரணமாக சாலைகளில் தெரிவுநிலை குறையும் அபாயம் இருப்பதாக NCM அறிவித்திருந்தது.

குறிப்பாக அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள பகுதிகளில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற தூசி எச்சரிக்கைகளை வானிலை மையம் வெளியிட்டிருந்தது. மேலும் இதனால் அப்பகுதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் தெரிவுநிலை 2,000 மீட்டருக்குக் கீழ் குறைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

எனவே, தீவிரமான தூசிப் புயலுக்கு மத்தியில், வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்க வேண்டும், தூசிக்கு நேரடியாக வெளிப்பாட்டைத் தவிர்க்க வேண்டும், உத்தியோகபூர்வ வானிலை புதுப்பிப்புகளைச் சரிபார்ப்பதன் மூலம் தகவல்களைத் தொடர்ந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று வானிலை மையம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

நாளைய வானிலை நிலவரம்:

​​நாளைய தினத்திற்கான முன்னறிவிப்பில், வடக்கு, கடலோர மற்றும் கிழக்கு பகுதிகளின் சில பகுதிகளில் ஓரளவு மேகமூட்டமான வானிலை மற்றும் தூசி நிறைந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும், நாளை இரவு மற்றும் வியாழக்கிழமை காலை ஈரப்பதம் நிலைகள் உயரும் என்றும் மையம் கணித்துள்ளது.

வானிலை அறிக்கையின் படி, வடமேற்கில் இருந்து காற்று மிதமானதாக இருக்கும், காலையில் தீவிரமடைந்து தூசி மற்றும் மணல் வீசும். காற்றின் வேகம் மணிக்கு 20-35 கிமீ வேகத்தில் இருக்கும், சில சமயங்களில் மணிக்கு 50 கிமீ வரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடல் பகுதிகளைப் பொறுத்த வரை, அரேபிய வளைகுடாவில் கடல் மிகவும் சீற்றமாகவும், ஓமான் கடலில் ஓரளவு சீற்றமானதாகவும் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!