இன்னும் சில நாட்களில் மூடப்படவிருக்கும் துபாய் ஃபவுன்டைன் ஷோ!! இறுதி நிகழ்ச்சி எப்போது..??

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றான துபாய் ஃபவுன்டைன் ஷோ, வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி அதன் இறுதி நிகழ்ச்சியை நிகழ்த்தும் என்றும், பின்னர் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் தற்காலிகமாக மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து மாத காலத்திற்கு மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் ஃபவுண்டைனின் நடன அமைப்பு, விளக்குகள் மற்றும் ஒலி அமைப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
புதுப்பிப்பு பணியின் போது ஃபவுண்டைன் நிகழ்ச்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும், இந்த பணிகளால் ஃபவுண்டனில் பிரபலமான அப்ரா சவாரிகளும் இடைநிறுத்தப்படும் என்றும் துபாய் மால் உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த விரிவான புதுப்பித்தல் திட்டம் அக்டோபர் 2025 க்குள் நிறைவடையும் என்றும், பார்வையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்துடன் ஃபவுண்டைன் மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயின் அடையாளமான புர்ஜ் கலீஃபாவிற்கு அருகில், டவுன்டவுன் துபாயில் அமைந்துள்ள துபாய் ஃபவுன்டைன், அதன் நீர் நடனம், ஒளி மற்றும் இசை நிகழ்ச்சிகளால் மில்லியன் கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கிறது. Emaar நிறுவனர் முகமது அலப்பார், துபாய் ஃபவுன்டைன் என்பது துபாயின் முதன்மையான பிரதிபலிப்பு என்று முன்னதாக கூறியிருந்தார்.
தற்போது, புதுப்பித்தல் இந்த அடையாளத்தை உயர்த்துவதையும் எதிர்காலத்திற்கு இன்னும் ஊக்கமளிக்கும் அனுபவங்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார். துபாய் ஃபவுண்டைன் சிறிது இடைவேளை எடுக்கும் அதே வேளையில், அது மீண்டும் திறக்கப்பட்டவுடன் பார்வையாளர்கள் மேம்பட்ட மற்றும் இன்னும் அற்புதமான நிகழ்ச்சியை எதிர்நோக்கலாம் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel