அமீரகத்தில் தூசி நிறைந்த வானிலை: புழுதிப் புயலின் போது ஓட்டுநர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன…??

அமீரகத்தில் வசிக்கும் நீங்கள் வெளியே புறப்படும் சமயத்தில் வானிலை தூசி நிறைந்ததாக மாறுவதைக் கவனித்தால், வாகனம் ஓட்டுவதற்கு முன்பும், வாகனம் ஓட்டும்போதும் கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியம். ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) எச்சரித்தது போல, புழுதிப் புயல் எதிர்பார்க்கப்படும் நாட்களில் வாகன ஓட்டிகள் முன்னெச்சரிக்கையாகவும் தயாராகவும் இருக்க வேண்டும்.
புழுதி நிறைந்த வானிலையில் வாகனம் ஓட்டுவது குறிப்பாக சாலையில் மணல் இருந்தால் குறைவான தெரிவுநிலை (visibility) மற்றும் குறைந்த டயர் பிடிப்பு காரணமாக ஆபத்தானதாகும். துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) படி, தூசிப் புயலின் போது ஓட்டுநர்கள் பின்பற்ற வேண்டிய ஐந்து முக்கிய பாதுகாப்பு குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. வாகனத்தின் ஹெட்லைட்களைச் சரிபார்க்கவும்
உங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன், உங்கள் கார் விளக்குகள் அனைத்தும் சரியாக வேலை செய்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், புழுதிப்புயல் தெரிவுநிலையை வெகுவாகக் குறைக்கும். வாகனம் ஓட்டும் போது நல்ல தெரிவுநிலை மிக முக்கியமானது.
2. மெதுவாகவும் கவனமாகவும் ஓட்டுங்கள்
மணல் மற்றும் தூசியுடன் வீசும் காற்று சாலை அபாயங்களை மறைத்து, தெரிவுநிலையைக் குறைக்கும். எனவே, இதுபோன்ற சீரற்ற வானிலையின் போது, உங்கள் வேகத்தைக் குறைக்கவும், முன்னால் உள்ள காரில் இருந்து பாதுகாப்பான தூரத்தை பின்பற்றவும், மேலும் கூர்மையான திருப்பங்கள் அல்லது திடீர் பிரேக்கிங் போன்ற திடீர் நகர்வுகளைத் தவிர்க்கவும்.
3. தொலைபேசியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
வாகனம் ஓட்டும்போது வீடியோக்கள் அல்லது படங்களை எடுக்க வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக மோசமான தெரிவுநிலையில், சாலையில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். ஒரு சிறிய கவனச்சிதறல் கூட கடுமையான விபத்துக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
4. நகரும் போது அபாய விளக்குகளைப் பயன்படுத்த வேண்டாம்
உள்துறை அமைச்சகம், வாகனம் ஓட்டும்போது அபாய விளக்குகளைப் (hazard lights) பயன்படுத்த வேண்டாம் என்று ஓட்டுநர்களை அறிவுறுத்துகிறது. ஏனெனில் அவை வாகனம் நிறுத்தப்படும்போது அவசரநிலைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அத்துடன், உங்கள் பாதையில சரியாக மற்றும் எச்சரிக்கையாக ஓட்டுவதை உறுதி செய்யுமாறு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
5. ஜன்னல்களை மூடி வைக்கவும்
புழுதிப் புயலின் போது, வாகனம் ஓட்டுபவர்கள் காரின் அனைத்து ஜன்னல்களையும் மூடிவிட்டு, ஏர் கண்டிஷனிங்கை இயக்குமாறு அதிகாரிகளால் அறிவுறுத்தப்படுகிறார்கள். இது வாகனம் ஓட்டும் போது சிறந்த தெரிவுநிலையையும் வசதியையும் பராமரிக்க உதவுகிறது.
மேற்கூறிய உதவிக்குறிப்புகள், தூசி நிறைந்த வானிலையின் போது, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் நோக்கில் அதிகாரத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel