அமீரக செய்திகள்

3 மாதங்களில் 23.4 மில்லியன் பயணிகளை வரவேற்று சாதனை படைத்த துபாய் ஏர்போர்ட்..!!

உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் 23.4 மில்லியன் பயணிகளை வரவேற்று 2025 ஆம் ஆண்டிற்கான வலுவான தொடக்கத்தைக் கண்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 1.5 சதவீதம் அதிகமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஜனவரி மாதம் விமான நிலையத்தின் மிகவும் பரபரப்பான மாதமாக இருந்துள்ளது. அந்த மாதத்தில் விமான நிலையம் 8.5 மில்லியன் பயணிகளைக் கையாண்டதாகக் கூறப்படுகின்றது. விமான நிலையத்தின் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் முயற்சியாலும் இந்த சாதனை சாத்தியமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பயண இலக்கு நாடுகள் மற்றும் நகரங்கள்

துபாய் ஏர்போர்ட்டில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா 3 மில்லியன் பயணிகளுடன் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து பின்வரும் நாடுகள் உள்ளன:

  • சவுதி அரேபியா: 1.9 மில்லியன்
  • இங்கிலாந்து: 1.5 மில்லியன்
  • பாகிஸ்தான்: 1 மில்லியன்
  • அமெரிக்கா: 804,000
  • ஜெர்மனி: 738,000

நகரங்கள்:

  • லண்டன்: 935,000
  • ரியாத்: 759,000
  • ஜெத்தா: 627,000
  • மும்பை: 615,000
  • புது டெல்லி: 564,000

நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பயணிகளின் அதிகரிப்பிற்கு ஆண்டின் தொடக்கத்தில் குளிர்கால பருவம், ஈத் விடுமுறைகள் மற்றும் வசந்த கால விடுமுறைகள் போன்றவை காரணம் என்று கூறப்படுகின்றது.

விமான நிலைய செயல்பாடுகள் மற்றும் செயல்திறன்

DXB முதல் காலாண்டில் 111,000 விமான இயக்கங்களையும் பதிவு செய்துள்ளது, இது 1.9% அதிகரிப்பாகும். மேலும் ஒரு விமானத்திற்கு சராசரியாக 215 பயணிகள் என்றும் கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சரக்குகளைப் பொறுத்தவரை, முதல் காலாண்டில் 517,000 டன்களை DXB கையாண்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.6% குறைவு ஆகும்.

முதல் காலாண்டில் 21 மில்லியனுக்கும் அதிகமான லக்கேஜ்கள் செயலாக்கப்பட்டன, தவறாகக் கையாளப்பட்ட லக்கேஜ்களின் விகிதம் 1,000 பயணிகளுக்கு 1.95 லக்கேஜ்கள் என குறைந்துள்ளது. இதன் விளைவாக 99.8 சதவீத வெற்றி விகிதம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில். பயோமெட்ரிக் பாஸ்போர்ட் கட்டுப்பாடு மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு ஆகியவற்றால் 95% சதவீதத்திற்கும் அதிகமான பயணிகள் குறைந்தபட்ச காத்திருப்பு நேரங்களை அனுபவித்ததை உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து துபாய் விமான நிலையங்களின் தலைமை நிர்வாக அதிகாரி பால் கிரிஃபித்ஸ் கூறுகையில், “எங்கள் இந்த வருடத்திற்கான முதல் காலாண்டில் செயல்திறன் வரவிருக்கும் காலத்திற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது, DXB இன் வரலாற்றில் மிகவும் பரபரப்பான மாதத்தை வழங்குவது சிறிய சாதனையல்ல. இதற்கு துல்லியம், சுறுசுறுப்பு மற்றும் அசாதாரண குழுவின் முயற்சி தேவை” என்று தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!