அமீரக செய்திகள்

துபாயின் நன்மதிப்பை உயர்த்தும் குடியிருப்பாளர்கள்..!! கீழே கண்டெடுத்த நகை, பணத்தை போலீஸிடம் ஒப்படைத்த இருவர்..!!

உலகின் பல நாடுகளை சேர்ந்த பலரும் வாழக்கூடிய நாடாக ஐக்கிய அரபு அமீரகம் இருந்து வருகிறது. சமீபத்திய கணக்கெடுகளின் அடிப்படையில் உலகின் பாதுகாப்பான நாடு மட்டுமல்லாமல் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலிலும் துபாய், அபுதாபி இடம்பிடித்துள்ளது. இந்நிலையில், துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் இருவர், தொலைந்து போன மதிப்புமிக்க பொருட்களை கண்டெடுத்ததும் அதனை நேர்மையுடன் அதிகாரிகளிடம் திருப்பி ஒப்படைத்து அதற்கு இதற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளனர்.

இவ்வாறு நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு கலாச்சாரத்தை தொடர்ந்து வளர்த்து வரும் துபாயில், சமீபத்தில் நைஃப் காவல் நிலைய அதிகார வரம்பில் மதிப்புமிக்க நகைகள் மற்றும் பணத்தைக் கண்டதும், அதனை நேரடியாக காவல் நிலையம் சென்று திருப்பித் தந்த இரண்டு குடியிருப்பாளர்களை அவர்களின் நேர்மைக்காக துபாய் அதிகாரிகள் கௌரவித்துள்ளனர்.

முகமது அசாம் மற்றும் சையத் அகமது ஆகிய இருவரும் இதனை ஒப்படைத்ததாகவும், அவர்களின் நேர்மை மற்றும் பொறுப்பான செயல்களுக்காக பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாகவும் துபாய் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கௌரவத்திற்கு அசாம் மற்றும் அகமது இருவரும் நன்றி தெரிவித்ததுடன், மேலும் மதிப்புமிக்க பொருட்களை திருப்பித் தருவது அவர்களின் கடமை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து நைஃப் காவல் நிலையத்தின் செயல் இயக்குநர் பிரிகேடியர் நிபுணர் உமர் அஷூர் பேசுகையில், “சமூக உறுப்பினர்கள் நேர்மையுடன் செயல்படும்போது, ​​அவர்கள் பொதுமக்களின் நம்பிக்கையை வளர்த்து, நாட்டின் நற்பெயருக்கு பங்களிக்க உதவுகிறார்கள்” என்று அத்தகைய நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்.

துபாய் காவல்துறையின் இந்த அங்கீகாரம் நேர்மையான செயல் மற்றும் சமூக ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை பிரதிபலிக்கிறது. அத்துடன் இதுபோன்று பொருப்புடன் நடந்துகொள்ளும் நேர்மையான குடியிருப்பாளர்களை துபாய் காவல்துறை இவ்வாறு கௌரவிப்பது இது முதல்முறை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

எப்போதும் விழிப்புடன் இருக்கும் காவல் துறை, வலுவான சட்ட அமைப்பு மற்றும் சட்டத்தை மதிக்கும் கலாச்சாரத்துடன் மிகக் குறைந்த குற்ற விகிதங்கள் என உள்ளூர்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் திருட்டு அல்லது ஆபத்து பற்றிய பயம் இல்லாமல் இருக்க துபாய் அனுமதிக்கிறது. துபாயில் அவர்கள் அனுபவிக்கும் இந்த பாதுகாப்பு உணர்வு பெரும்பாலும் சமூக ஊடக ரீல்களில் வெளிநாட்டவர்களால் அவ்வப்போது சிறப்பிக்கப்பட்டும் வருகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!