துபாய் க்ரீக் மீது புதிய எட்டு வழி பாலத்தை கட்டும் RTA.!! பர் துபாயில் போக்குவரத்தை எளிதாக்க முயற்சி..!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), துபாய் க்ரீக் மீது எட்டு வழி பாலம் கட்டுவதாக அறிவித்துள்ளது. இது துபாயைச் சுற்றியுள்ள போக்குவரத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. RTA-வின் உள்கட்டமைப்பு மூலோபாயத்தின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கும் இந்த பாலம், துபாய் ஐலேண்ட்ஸ்க்கு மேம்பட்ட அணுகலை வழங்கும் மற்றும் பர் துபாய் மற்றும் சுற்றியுள்ள மேம்பாடுகளுக்கு இடையிலான போக்குவரத்து இடையூறுகளைக் குறைக்கும் என்று ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RTA வெளியிட்டுள்ள விபரங்களின் படி, ஒவ்வொரு திசையிலும் நான்கு பாதைகளுடன் கூடிய இந்த பாலம் 1,425 மீட்டர் நீளம் கொண்டது. இதற்கான கட்டுமான ஒப்பந்தம் 786 மில்லியன் திர்ஹம் செலவில் வழங்கப்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்டவுடன், பாலம் இரு திசைகளிலும் மணிக்கு 16,000 வாகனங்களை அனுமதிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துபாய் க்ரீக்கின் மேற்பரப்பில் இருந்து 18.5 மீட்டர் உயரத்தில் பாலம் அமையும், இதனால் பல்வேறு கப்பல்கள் க்ரீக் வழியாக சுதந்திரமாக கடந்து செல்ல முடியும். மேலும், 75 மீட்டர் அகலமுள்ள வழிசெலுத்தல் கால்வாய் உள்ளது. கூடுதலாக, இது எளிதாக அணுகுவதற்காக வடிவமைக்கப்பட்ட லிஃப்ட்களுடன் ஒரு பிரத்யேக பாதசாரி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் பாதையைக் கொண்டிருக்கும். அதிகாரத்தின் கூற்றுப்படி, இந்த பாலம் RTA இன் முதன்மை உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றான அல் ஷிண்டாகா காரிடார் மேம்பாட்டிற்கு ஒரு முக்கிய அங்கமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த புதிய பாலம் துபாய் க்ரீக்கை விரிவுபடுத்தி, இன்ஃபினிட்டி பாலத்தை போர்ட் ரஷீத் மேம்பாட்டுப் பகுதியுடன் இணைக்கும் என்றும் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், துபாய் ஐலேண்ட்ஸ் மற்றும் பர் துபாய் பகுதிகளின் இருபுறமும் உள்ள தற்போதைய சாலைகளுடன் பாலத்தை இணைக்க 2,000 மீட்டர் நீளமுள்ள மேற்பரப்பு சாலைகள் கட்டப்படும் என்று RTAவின் இயக்குநர் ஜெனரலும் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மட்டர் அல் டயர் தெரிவித்துள்ளார்.
அல் ஷிந்தகா காரிடார் மேம்பாடு
இந்த பாலம் பெரிய அல் ஷிந்தகா காரிடார் மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது 13 கிலோமீட்டர் நீளம் கொண்டது மற்றும் 15 சந்திப்புகளின் கட்டுமானத்தை உள்ளடக்கியது. அதன் அளவு காரணமாக ஐந்து கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்த திட்டம், துபாய் ஐலேண்ட்ஸ், தேரா வாட்டர் பிரன்ட், துபாய் மேரிடைம் சிட்டி மற்றும் போர்ட் ரஷீத் போன்ற முக்கிய மேம்பாடுகளை இணைக்கும்.
அல் ஷிந்தகா காரிடார் பயண நேரத்தை குறைப்பதன் மூலம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு பயனளிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. இந்த வழித்தடத்தின் மேம்பாடு பயண நேரத்தை 104 நிமிடங்களிலிருந்து வெறும் 16 நிமிடங்களாகக் குறைக்கும், இதனால் 20 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 45 பில்லியன் திர்ஹம்ஸ் சேமிக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
துபாய் ஐலேண்ட்ஸ்க்கான இணைப்பை வலுப்படுத்துதல்
துபாய் ஐலேண்ட்ஸ்க்கு நேரடி நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களை உருவாக்கும் முயற்சியின் கீழ் இந்த திட்டம் அமைந்துள்ளதாக அல் டயர் எடுத்துரைத்துள்ளார். முன்னதாக, 2020 ஆம் ஆண்டில் மூன்று பாலங்களின் கட்டுமானத்தை RTA நிறைவு செய்தது, இது துபாய் தீவுகள் மற்றும் அல் கலீஜ் தெரு உட்பட சுற்றியுள்ள பகுதிகளுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தியது.
6 பில்லியன் திர்ஹம் மதிப்பிலான உள்கட்டமைப்பு ஒப்பந்தம்
இந்த திட்டம் RTA மற்றும் துபாய் ஹோல்டிங் இடையேயான 6 பில்லியன் திர்ஹம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். இந்த ஒத்துழைப்பில் ஜுமைரா வில்லேஜ் (JVT), பாம் பீச் டவர்ஸ், அல் ஃபர்ஜன், ஜுமேரா பார்க், அர்ஜன், மஜான், லிவான் (கட்டம் 1), நாத் அல் ஹமர், வில்லனோவா மற்றும் செரீனா போன்ற ஒருங்கிணைந்த திட்டமிடப்பட்ட சமூகங்களின் நிலைக்கு அதை உயர்த்தும் என்று கூறப்பட்டுள்ளது.
கூடுதலாக, இந்த ஒப்பந்தம் ஐந்து முக்கிய மேம்பாட்டுப் பகுதிகளுக்கான அணுகலை மேம்படுத்த பாலங்கள் மற்றும் சாலைகளை நிர்மாணிப்பதை உள்ளடக்கியதாகும். இந்த மேம்பாடுகள் சில பகுதிகளில் பயண நேரத்தை 40% வரை குறைக்கும் என்பதுடன், இது ஒரு மென்மையான மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கும். மேற்கூறிய இந்த லட்சிய உள்கட்டமைப்பு திட்டங்களுடன், துபாயின் இணைப்பு மற்றும் போக்குவரத்து ஓட்டத்தை கணிசமாக மேம்படுத்துவே RTA வின் முக்கிய நோக்கமாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel