வளைகுடா செய்திகள்

42 ஆண்டுகளாக பஹ்ரைனில் சிக்கித் தவித்த இந்தியர்..!! மீண்டும் குடும்பத்தினருடன் இணைத்த அரசு சாரா நிறுவனம்..!!

கேரளாவைச் சேர்ந்த கோபாலன் சந்திரன் என்ற இந்தியர், சரியான ஆவணங்கள் இல்லாததால் 42 ஆண்டுகள் பஹ்ரைனில் சிக்கித் தவித்த பிறகு இறுதியாக வீடு திரும்பிய நிகழ்வு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. வெளிநாடுகளில் அநீதியை எதிர்கொள்ளும் இந்தியர்களை ஆதரிக்கும்  டெல்லியை தளமாகக் கொண்ட ஒரு அரசு சாரா நிறுவனமான பிரவாசி சட்டப் பிரிவின் (Pravasi Legal Cell-PLC) தலையீட்டால், பல தசாப்த கால போராட்டத்திற்குப் பிறகு சந்திரன் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ளார்.

சந்திரனின் நான்கு தசாப்த கால போராட்டம், வெளிநாடுகளில் உள்ள பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அமைதியான கஷ்டங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அவர் எப்படி பஹ்ரைன் வந்தார், ஏன் நாடு திரும்ப முடியாமல் தவித்தார் உள்ளிட்ட பல விஷயங்கள் தற்போது வெளிவந்துள்ளது.

சந்திரன் தனது குடும்பத்தை ஆதரிக்க 1983 இல் பஹ்ரைனுக்குப் பயணம் செய்திருக்கிறார். இருப்பினும், அவர் வந்து சில மாதங்களுக்கு பிறகு, அவரது முதலாளி உயிரிழந்துள்ளார். மேலும், சந்திரன் தனது பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டார். எனவே, சரியான ஆவணங்கள் இல்லாமல், இந்தியாவுக்குத் திரும்ப முடியாமல் அவர் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக பஹ்ரைனில் சிக்கித் தவித்திருக்கிறார்.

இந்தியாவிற்கு திரும்பி செல்ல வேறுவழியின்றி பல ஆண்டுகளாக, அவர் அமைதியாக பஹ்ரைனில் தொடர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் 2020 இல், மற்றொரு இந்திய வெளிநாட்டவருடனான தகராறின் பின்னர் அவர் பஹ்ரைன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அவரது கதையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

பிரவாசி சட்டப் பிரிவின் உதவி

சந்திரனின் கதை 2020 இல் ஒரு மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது. மேலும் அவரது தாயார் இன்னும் உயிருடன் இருப்பதை உள்ளூர் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் அவர் வீடு திரும்ப பிரவாசி சட்டப் பிரிவு அவருக்கு உதவ முன்வந்தது. தேவையான ஆவணங்களைச் சேகரிக்க அவர்கள் கடுமையாக உழைத்ததுடன் சந்திரனுக்கு சட்டப்பூர்வ செயல்முறைக்கு உதவியுள்ளனர்.

அவரை பாதுகாப்பாக தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்க, இந்த அரசு சாரா நிறுவனம் இந்திய தூதரகம் மற்றும் பஹ்ரைனின் குடியேற்ற அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டதாகவும், அவருக்கு தங்குமிடம் வழங்கி, அவரது குடும்பத்தைக் கண்டுபிடித்து, மேலும் இந்தியாவுக்குத் திரும்புவதற்கான பயணத்தை ஏற்பாடு செய்ததாகவும் பிரவாசி சட்டப் பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்புதல்

தற்போது 64 வயதாகும் சந்திரன், இறுதியாக கேரளாவுக்குத் திரும்பியுள்ளார். நான்கு தசாப்த கால இடைவெளிக்குப் பிறகு அவர் தனது 95 வயது தாயாருடன் மீண்டும் இணைந்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக, அவர் பஹ்ரைனுக்குச் சென்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1985 இல் அவரது தந்தை காலமாகி விட்டார்.

திருமணம் செய்து கொள்ளாத சந்திரன், இப்போது தனது பழைய வாழ்க்கையிலிருந்து துண்டிக்கப்பட்டதாக உணர்வதாகக் கூறியதுடன், “என் குடும்பத்தில் இரண்டு தலைமுறைகள் கடந்துவிட்டன, ஆனால் என் வாழ்க்கை அப்படியே நின்றுவிட்டது” என்று கூறியுள்ளார். சந்திரன் இப்போது கேரளாவில் தனது மூத்த சகோதரர் மோகனனின் குடும்பத்துடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!