ஓமானில் 5.1 ரிக்டர் அளவில் இன்று பதிவான நிலநடுக்கம்..!!

ஓமனின் தெற்கு பகுதியில் இன்று (ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:32 மணியளவில் தோஃபர் கவர்னரேட்டில் 4 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. மேலும் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியானது மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு வெகுதொலைவில் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சலாலாவின் வடகிழக்கில் இருந்து 155கிமீ தொலைவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இலேசாக உணரப்பட்டது என்றாலும் எவ்வித சேதத்தையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகின்றது. ஓமனில் இது போன்ற நிலநடுக்கங்கள் அவ்வப்போது ஏற்படுகின்றன. அதே போல் அண்டை நாடான ஐக்கிய அரபு அமீரகத்திலும் உருவாகின்றன. ஐக்கிய அரபு அமீரகம் பெரிய நில அதிர்வு மண்டலங்களுக்கு வெளியே இருந்தாலும், அவ்வப்போது சிறிய நிலநடுக்கங்கள் பதிவாகின்றன.
இது போன்ற நிலநடுக்கங்களை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று நிலநடுக்கவியல் நிபுணர்கள் குடியிருப்பாளர்களுக்கு தொடர்ந்து உறுதியளித்து வருகின்றனர். இது குறித்து NCM இல் நிலநடுக்கவியல் துறையின் இயக்குனர் கலீஃபா அல் எப்ரி கூறுகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் அவ்வப்போது சிறிய நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இது பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. எனவே பொதுமக்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று கூறியுள்ளார்.
அத்தகைய நிலநடுக்கங்கள் கட்டிடங்கள் அல்லது உள்கட்டமைப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்றும், நாடு ஆண்டுக்கு இரண்டு முதல் மூன்று சிறிய நிலநடுக்கங்களை மட்டுமே அனுபவிக்கிறது என்றும், பெரும்பாலும் இந்த நிலநடுக்கங்கள் சிறப்பு சென்சார்களால் மட்டுமே கண்டறியப்படுகிறது என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel