நைஃப் பகுதியில் காணாமல் போன குழந்தையை ஒரு மணி நேரத்தில் மீட்ட துபாய் காவல்துறை..!!

துபாய் காவல்துறையின் விரைவான நடவடிக்கையால், ஆறு வயது மாற்றுத்திறனாளி குழந்தை காணாமல் போன ஒரு மணி நேரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் பாதுகாப்பாக குடும்பத்தினருடன் இணைந்துள்ளது. காணாமல் போன குழந்தையானது தனது தந்தையின் பணியிடத்திற்கு செல்ல விரும்பி, தற்செயலாக தெருவில் அலைந்து திரிந்து, துபாயில் நெரிசலான பகுதியான நைஃப் மார்க்கெட்டில் தொலைந்து போயுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, நைஃப் சந்தையில் ஒரு குழந்தை தனியாக சுற்றித் திரிவதாக துபாய் காவல்துறையின் பொது செயல்பாட்டுத் துறையில் உள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு சிறுவன் அழுது கொண்டிருப்பதைப் பார்த்த அதிகாரிகள், அவரை நைஃப் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுவனின் குடும்பத்தை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், ஒரு மணி நேரத்திற்குள் அந்த சிறுவனின் தந்தையைக் கண்டுபிடித்துள்ளனர். அப்போது அந்த குழந்தை தனது தாயுடன் செல்வதாக நினைத்து வீட்டை விட்டு வெளியேறி, தெருவில் அலைந்து திரிந்ததாக அவர் விளக்கமளித்துள்ளார். இதையடுத்து, எதிர்காலத்தில் தனது குழந்தையை உன்னிப்பாகக் கண்காணித்து, எல்லா நேரங்களிலும் அவரது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அதிகாரப்பூர்வ உறுதிமொழியில் தந்தை கையெழுத்திட்டுள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, துபாய் காவல்துறை, தங்கள் குழந்தைகள் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும், அவர்களை ஒருபோதும் கவனிக்காமல் விட்டுவிடாமல் இருப்பதன் முக்கியத்துவத்தையும் பெற்றோருக்கு நினைவூட்டியுள்ளது.
மேலும், நெரிசலான அல்லது பொது இடங்களில் காவல்துறை அல்லது பாதுகாப்புப் பணியாளர்களின் உதவியை நாடுவது உட்பட, குழந்தைகள் தொலைந்து போனால் எவ்வாறு நடந்துகொள்வது என்பதை அவர்களுக்குக் கற்பிக்கவும் காவல்துறை அதிகாரிகள் பெற்றோர்களை அறிவுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel