துபாய்: ஈஸ்டர் கொண்டாட்டங்களுக்காக இலவச பேருந்து சேவைகளை அறிவித்த RTA!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஏப்ரல் 18 முதல் 20 வரை ஈஸ்டர் கொண்டாட்டங்களின் போது பார்வையாளர்களுக்கு இலவச பேருந்து சேவைகளை வழங்குவதாக அறிவித்தது. அதன்படி, ஈஸ்டர் வார இறுதியில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை எனர்ஜி மெட்ரோ நிலையம் மற்றும் ஜெபல் அலியில் உள்ள சர்ச் வளாகங்களுக்கு இடையே இலவச ஷட்டில் பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக RTA வெளியிட்ட அறிக்கையில், இந்த முயற்சி சகவாழ்வு, சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கான UAE தலைமையின் உத்தரவுகளுக்கு இணங்க மேற்கொள்ளப்படுகிறது என்றும், அதே நேரத்தில் துபாயின் பல்வேறு சமூகங்களுடன் ஈடுபடுவதற்கான அதிகாரசபையின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது என்றும் எடுத்துரைத்துள்ளது.
அதேபோன்று சிட்டியின் மையப்பகுதியை ஒட்டிய பகுதியான ஓத் மெத்தாவில் இருந்து ஈஸ்டர் நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களுக்கு, ஓத் மெத்தா மெட்ரோ நிலையத்திலிருந்து (Oud Metha Metro Station) ஒரு குறுகிய நடைப்பயணத்தின் மூலம் இந்த இடத்தை எளிதாக அணுகலாம் என்றும் RTA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வார தொடக்கத்தில், RTA அதன் அடுத்த தலைமுறை எலெக்ட்ரிக் பஸ்ஸின் பைலட் சோதனையை தொடங்கியதாக அறிவித்துள்ளது. இது 2050 ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய-உமிழ்வு பொது போக்குவரத்தை அடைவதற்கான இலக்கை நோக்கி, துபாய் எமிரேட்டின் ஒரு குறிப்பிடத்தக்க நகர்வைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.
நகரத்தின் போக்குவரத்து வலையமைப்பு முழுவதும் ஸ்மார்ட் மற்றும் நிலையான மொபிலிட்டி தீர்வுகளை அறிமுகப்படுத்துவதற்கான RTAவின் பரந்த உத்தியின் ஒரு பகுதியாக அறிமுகுப்படுத்தப்படும் இந்த எலெக்ட்ரிக் பஸ் தற்போது F13 வழித்தடத்தில் இயங்குகிறது. மேலும், இது பின்வரும் முக்கிய இடங்களை இணைக்கும் ஒரு முக்கிய மெட்ரோ இணைப்பு பாதையாகவும் உள்ளது. அவை;
- அல் குஸ் பஸ் டிப்போ
- புர்ஜ் கலீஃபா
- தி பேலஸ் டவுன்டவுன் ஹோட்டல்
- துபாய் ஃபவுன்டைன்
- துபாய் மால் மெட்ரோ பஸ் நிறுத்தம் (தெற்கு)
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel