UAE: ஈத் விடுமுறையை கொண்டாடிவிட்டு திரும்பும் வழியில் விபத்து.. இந்தியர் மரணம்.!!

அமீரகத்தில் ஈத் விடுமுறைக்கு சுற்றுலா சென்று திரும்பும் வழியில் விபத்துக்குள்ளாகி இந்தியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சஜினாபானு என்ற 53 வயதான பெண் கடந்த செவ்வாய்க்கிழமை, ஈத் விடுமுறையை கழித்து விட்டு வீடு திரும்பும் வழியில் கார் கவிழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தியரான சஜினாபானு தனது குடும்பத்தினருடன் அல் அய்னிலிருந்து அஜ்மானுக்கு பயணம் செய்து கொண்டிருந்த சமயத்தில் இந்த கோர விபத்து நடந்ததாகக் கூறப்படுகின்றது.
அவரது குடும்பத்தினர் அளித்த விபரங்களின் படி, சஜினாபானுவும் அவரது கணவர் நசீரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அஜ்மானில் வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், ஒருவர் இந்தியாவில் மருத்துவராகவும், மற்றவர் விபத்தின் போது காரில் அவர்களுடன் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
ஏழு பேர் கொண்ட இவர்களின் குடும்பம் அல் அய்னில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் திங்கட்கிழமை ஓய்வெடுத்த பின்னர், அஜ்மானில் உள்ள தங்கள் வீடுகளுக்கு திரும்பும் வழியில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாகக் குடும்ப உறுப்பினர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற நீண்ட விடுமுறை நாட்களில் தங்கும் விடுதிகள் (staycation) அல்லது முகாம் என குறுகிய பயணங்களை மேற்கொள்வது அவர்களுக்கு ஒரு பழக்கம் என்று அவரின் குடும்ப உறுப்பினர் கூறியுள்ளார்.
என்ன நடந்தது?
விபத்து நடந்தபோது குடும்பத்தினர் சாலையில் மிக மெதுவான வேகத்தில் ஓட்டிச் சென்றபோது ஒரு பம்பில் மோதி ஸ்டீயரிங் சிக்கிக் கொண்டதால், கார் கவிழ்ந்ததாகவும், சஜினாபானு காரிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயமடைந்து உடனடியாக இறந்ததாகவும் சஜினாபானுவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், காரில் இருந்த வேறு யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
இதையடுத்து, சஜினாபானு அல் அய்னில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து அவரது உடலை இந்தியாவிற்கு விமானத்தில் கொண்டு சென்று அடக்கம் செய்யக்கூடிய வகையில் ஆவணங்களை முடிக்க சமூக சேவகர் ஒருவர் குடும்பத்தினருக்கு உதவியதாகக் கூறப்படுகின்றது.
அவரின் திடீர் இழப்பு குடும்பத்தினரை அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், சஜினாபானுவின் உடல் அவரது இறுதிச் சடங்குகளுக்காக இந்தியாவின் கோழிக்கோட்டில் உள்ள அவரது சொந்த ஊருக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel