அமீரக செய்திகள்

துபாயில் மீண்டும் திறக்கப்படவுள்ள ஜுமேரா பீச்.. 355 மில்லியன் திர்ஹம்ஸ் கடற்கரை திட்டம் விரைவில் முடியும்.. முனிசிபாலிட்டி தகவல்..!!

துபாயில் வருகின்ற ஜூலை மாதம் மேம்படுத்தப்பட்ட ஜுமேரா கடற்கரை குடியிருப்பாளர்களுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பார்வையாளர்கள் அமீரகத்தின் கடும் கோடை வெப்பத்தைத் தணிக்க உதவும் வகையில் சரியான நேரத்தில் திறக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

துபாய் அரசாங்க ஊடக அலுவலகம் (GDMO) அதன் ‘Meet the CEO’ தொடரின் ஒரு பகுதியாக நடத்திய ஊடக நிகழ்வின் போது இந்த தகவலை பகிர்ந்துள்ளது. அங்கு துபாய் நகராட்சியின் செயல் இயக்குநர் ஜெனரல் மர்வான் பின் காலிதா மற்றும் பிற உயர் அதிகாரிகள் நகரத்தின் சமீபத்திய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

பொது இடங்கள் மற்றும் கடற்கரைகள்

துபாய் நகராட்சியில் உள்ள பொது வசதிகள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி படேர் அன்வாஹி, துபாயின் பொது இடங்களில் புதிய மேம்பாடுகள் குறித்த புதுப்பிப்புகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது, 355 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கடற்கரை திட்டம் குறித்தும் பகிரந்துள்ளார். அதில் ஜூமேரா கடற்கரையில் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன என்றும், ஜூலை மாதத்திற்குள் அது பொதுமக்களுக்கு தயாராக இருக்கும் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் க்ரீக் மற்றும் கார்னிச்சிற்கு அருகிலுள்ள பகுதிகள் உட்பட அல் மம்சார் கடற்கரையில் நடைபெறும் மேம்பாடுகள் குறித்த புதுப்பிப்புகளையும் அவர் வழங்கியுள்ளார். கடந்த ஆண்டான ஜூன் 2024 இல், துபாய் 355 மில்லியன் திர்ஹம் கடற்கரை மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியது. இதில் அல் மம்சார் மற்றும் ஜுமேரா 1 கடற்கரைகளின் மேம்பாடுகள் அடங்கும். இந்தத் திட்டத்தில் அல் மம்சாரில் துபாயின் முதல் மிதக்கும் பாதசாரி பாலம் மற்றும் தேராவில் 24/7 இரவு கடற்கரை ஆகியவையும் அடங்கும்.

துபாய் முனிசிபாலிட்டி மேற்கொண்டு வரும் இந்த மிகப்பெரிய கடற்கரை திட்டத்தின் முழுத் திட்டமும் 5.7 கிமீ கடற்கரையை உள்ளடக்கும் என்றும், மேலும் இந்த திட்டங்கள் அனைத்தும் அடுத்த 18 மாதங்களில் முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜுமேரா 1 கடற்கரை திட்டமிட்டதை விட முன்னதாக மீண்டும் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கடற்கரை திட்டங்கள், பொது கடற்கரைகளின் நீளத்தை தற்போதைய அளவை விட 400% அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட துபாய் 2040 நகர்ப்புற மாஸ்டர் திட்டத்தின் ஒரு பகுதியாகும். கூடுதலாக, ஜுமைரா 2, ஜுமைரா 3 மற்றும் உம்மு சுகீம் 1 ஆகிய இடங்களில் உள்ள இரவு கடற்கரைகள் திறக்கப்பட்ட முதல் 18 மாதங்களுக்குள் 1.5 மில்லியன் பார்வையாளர்களை வரவேற்றதாக துபாய் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.

நகரத்தை பசுமையாக்குதல்

இதற்கிடையில், துபாய் முனிசிபாலிட்டி எமிரேட் முழுவதும் அதிக மரங்களை நடுவதிலும் பசுமையான இடங்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி ஒவ்வொரு நாளும் சுமார் 600 மரங்கள் நடப்படுவதாகவும், அதே நேரத்தில் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் ரோபோட்டிக்ஸ் பயன்படுத்தி ஆண்டுக்கு 90 மில்லியன் நாற்றுகளை வளர்ப்பதாகவும் துபாய் முனிசிபாலிட்டியின் பொது வசதிகள் துறையின் CEO அன்வாஹி குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!