பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ள துபாயின் புதிய ஏர்போர்ட்.. முதல் கட்டம் 2032-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என தகவல்..!!

துபாயில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தின் (DWC) முதல் கட்டப் பணிகள் வரும் 2032 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிக்கப்படும் பட்சத்தில் இது ஆண்டுதோறும் 150 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இது செயல்பாட்டிற்கு வந்ததும், துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (DXB) அனைத்து விமான நடவடிக்கைகளையும் விமான நிலையம் படிப்படியாக எடுத்துக் கொள்ளும் என்றும் அதிகாரிகள் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், துபாய் ஏவியேஷன் சிட்டி கார்ப்பரேஷனின் நிர்வாகத் தலைவர் கலீஃபா அல் ஜாஃபின், DWC இல் இரண்டாவது ஓடுபாதையை நிர்மாணிப்பதற்காக 1 பில்லியன் திர்ஹம்ஸ் ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக அறிவித்தார். இந்த புதுப்பிப்பு துபாயில் நடந்த தி ஏர்போர்ட் ஷோவின் போது பகிரப்பட்டது.
முன்னதாக இந்த வார தொடக்கத்தில், “உலகின் மிகவும் எதிர்கால விமான நிலையம்” என்று அழைக்கப்படும் DWC விமான நிலையத்தின் வடிவமைப்பை அதிகாரிகள் வெளியிட்டனர். மேலும் ஒப்பந்ததாரர்களுடன் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாகவும், 2032 காலக்கெடுவை பூர்த்தி செய்ய திட்டம் தீர்க்கமாக முன்னேறி வருவதாகவும் அல் ஜாஃபின் கூறியுள்ளார். இந்த பணிகள் முடிந்ததும், DWC உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக இருக்கும் என்றும், இது பயணிகளுக்கு தடையற்ற, தொழில்நுட்பம் சார்ந்த அனுபவத்தை வழங்கும் என்றும் கூறப்படுகின்றது.
விமான நிலைய வடிவமைப்பு மற்றும் அம்சங்கள்
அல் ஜாஃபினின் கூற்றுப்படி, விமான நிலையத்தில் பல Concourse-களை கொண்ட ஒரு பெரிய டெர்மினல் கட்டிடம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் DWC எட்டு சிறிய, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட விமான நிலையங்களாக செயல்படும் என்றும், இது மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட பயண சூழலை உருவாக்கும் என்றும் முன்னர் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த விமான நிலையம் பயண சேவையுடன் உலகத் தரம் வாய்ந்த சில்லறை விற்பனை, மேம்பட்ட வரி இல்லாத விற்பனை நிலையங்களுடன் பல்வேறு சேவைகளை வழங்கக்கூடிய இலக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அல் ஜாஃபின் கூறியுள்ளார். இந்த வார தொடக்கத்தில் ஒரு வீடியோ விளக்கக்காட்சியில் ரோபோடிக் லக்கேஜ் கேரியர்கள் மற்றும் சுய சேவை லக்கேஜ் கியோஸ்க்குகள் போன்ற எதிர்கால அம்சங்களும் இதில் இடம்பெறும் என்று காட்டப்பட்டுள்ளது.
விமான நிலைய பணிகள் நிறைவடைந்ததும், DWC ஆண்டுதோறும் 260 மில்லியன் பயணிகளையும் 12 மில்லியன் டன் சரக்குகளையும் கையாளும் என்று கூறப்பட்டுள்ளது. DXB ஐ விட ஐந்து மடங்கு பெரிய மற்றும் 70 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தில் இரண்டு டெர்மினல், ஏழு concourses மற்றும் 400 க்கும் மேற்பட்ட விமான வாயில்கள் அடங்கும்.
துபாய் விமான நிலைய கண்காட்சியில் பேசிய அல் ஜாஃபின், இந்த திட்டத்தின் குறிப்பிடத்தக்க பொருளாதார தாக்கத்தை எடுத்துரைத்தார். இது விமான நிலையத்தை சுற்றியுள்ள துபாய் சவுத் பகுதியில் வேலைகள் மற்றும் வீட்டுவசதி மூலம் 1 மில்லியன் மக்களை ஆதரிக்கும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “இது கட்டுமானம், விமான போக்குவரத்து, லாஜிஸ்டிக்ஸ், சுற்றுலா, ரியல் எஸ்டேட் மற்றும் சரக்கு போன்ற துறைகளில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும்” என்று அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel