பஹ்ரைன் பெட்ரோலிய நிறுவன விபத்து.. 2 ஊழியர்கள் பலி.. சேஃப்டி வால்வில் ஏற்பட்ட கசிவால் நேர்ந்த சோகம்..!!

பஹ்ரைன் பெட்ரோலியம் நிறுவனத்தின் (BAPCO) சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட ஒரு துயரமான தொழில்துறை விபத்தில் இரண்டு ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையத்தின் சுத்திகரிப்பு யூனிட் ஒன்றில் உள்ள பாதுகாப்பு வால்வில் (safety valve) கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.
மேலும் இரண்டு ஊழியர் உயிரிழந்த நிலையில் மூன்றாவது ஊழியர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் என்று பஹ்ரைன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் விரைவாகக் கட்டுப்படுத்தப்பட்டதாக BAPCO தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்ட ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும் மனமார்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துள்ளது. மேலும் காயமடைந்த ஊழியருக்கு விரைவாக குணமடைய விரும்புவதாகவும் கூறியுள்ளது.
இந்த சம்பவம் ஏறபட்டதையடுத்து நாட்டின் உள்துறை அமைச்சகம், சிவில் பாதுகாப்பு மற்றும் BAPCOவின் சொந்த சிறப்பு அவசரகால பதிலளிப்பு பிரிவின் அவசர குழுக்கள் உடனடியாக பதிலளித்து, நிலையான பாதுகாப்பு நெறிமுறைகளின்படி விபத்தை கையாண்டதாகவும் நிறுவனம் விவரித்துள்ளது. மேலும், சர்வதேச பாதுகாப்பு மற்றும் தடுப்பு தரநிலைகளுக்கு இணங்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம், நிலைமை இப்போது முழு கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், கசிவு நிறுத்தப்பட்டு, செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன என்றும் BAPCO தெரிவித்துள்ளது. மேலும் ஊழியர் மற்றும் ஒப்பந்ததாரர் பாதுகாப்பு, அத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை முதன்மையான முன்னுரிமைகளாக உள்ளன என்றும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel