அமீரகத்தில் திறக்கப்படும் அரபு பிராந்தியத்தின் முதல் டிஸ்னிலேண்ட் தீம் பார்க்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல்முறையாக உலகப் புகழ்பெற்ற தீம் பார்க் பிராண்டான டிஸ்னிலேண்ட் வரவுள்ளது. தலைநகர் அபுதாபியில் திறக்கப்பட உள்ள இந்த புதிய பொழுதுபோக்கு இடமானது, பிராந்தியத்தின் முதல் டிஸ்னி தீம் பார்க்காகவும், உலகளவில் ஏழாவது டிஸ்னி ரிசார்ட்டாகவும் இருக்கும் என்று கூறப்படுகின்றது. அபுதாபி யாஸ் ஐலேண்டில் நடந்த ஒரு சிறப்பு நிகழ்வின் போது இது பற்றிய தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியைப் பகிர்ந்து கொண்ட டிஸ்னி தலைமை நிர்வாக அதிகாரி பாப் இகர் (Bob Iger), இது நிறுவனத்திற்கு ஒரு வரலாற்று மைல்கல் என்று குறிப்பிட்டதுடன், “டிஸ்னிலேண்ட் முதன்முதலில் 1955 இல் திறக்கப்பட்ட எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு, எங்கள் அடுத்த சிறந்த தருணத்தை அறிவிப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம், அபுதாபியில் ஒரு புதிய டிஸ்னி தீம் பார்க் வரவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் பேசுகையில், “இந்த பார்க் டிஸ்னியின் அன்பான கதாபாத்திரங்களையும் கதைகளையும் உயிர்ப்பிக்கும், இது பிராந்தியத்தின் கலாச்சாரம் மற்றும் உணர்வோடு கலந்திருக்கும்” என்று கூறியுள்ளார். யாஸ் ஐலேண்டின் 15வது ஆண்டு விழாவின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அபுதாபியின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் தலைவர் முகமது அல் முபாரக், இதை ஐக்கிய அரபு அமீரகத்தின் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குக்கான ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் முக்கியமான சந்தர்ப்பம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
டிஸ்னியின் கூற்றுப்படி, இந்தப் பூங்கா அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பைக் கொண்டிருக்கும், இது கிளாசிக் டிஸ்னி மாயாஜாலத்தையும் பிராந்திய செல்வாக்குடன் இணைக்கும் ஆழமான அனுபவங்களை பார்வையாளர்களுக்கு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அதிகாரப்பூர்வ திறப்பு தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் இந்தத் திட்டம் உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel