துபாயின் வரவிருக்கும் துபாய் மெட்ரோ கோல்ட் லைன், நகரெங்கும் போக்குவரத்து நெரிசலை கணிசமாகக் குறைத்து, ஆண்டுக்கு 4 கோடிக்கும் அதிகமான சாலைப் பயணங்களை குறைப்பதோடு, போக்குவரத்து சீராகச் செல்லவும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 42 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடம், பழைய துபாயில் உள்ள அல் குபைபாவில் தொடங்கி, பிசினஸ் பே மற்றும் மேதான் போன்ற முக்கிய மாவட்டங்கள் வழியாகச் சென்று, ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட்ஸில் முடிவடையும் என்று RTA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை இயக்குநரும், நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மத்தார் அல் தாயரின் கூற்றுப்படி, இந்த வழித்தடம் புர்ஜுமான் மற்றும் ஆன்பாசிவ் நிலையங்களுக்கு இடையே ரெட் லைனில் உள்ள நெரிசலை 23 சதவீதம் வரை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தத் திட்டம் இரண்டு இடங்களில் எதிஹாட் ரெயிலுடன் ஒருங்கிணைந்து, துபாய்க்கு அப்பாலும் இணைப்பை மேம்படுத்தி, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் தடையற்ற பல்முனைப் போக்குவரத்து வலையமைப்பை ஆதரிக்கும் என்பதையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, கோல்டு லைன், முக்கிய குடியிருப்பு மற்றும் வணிக மையங்களில் குறுகிய மற்றும் நீண்ட தூரப் பயணத்தை மேம்படுத்துவதற்காக வளைய இணைப்புகளை (looped connections) அறிமுகப்படுத்தும். இது 55-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு சேவை செய்யும் என்றும், 2040-க்குள் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு பயனளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் 2040-க்குப் பிறகு தினசரி பயணிகளின் எண்ணிக்கை 4,65,000 பயணிகளை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இது துபாயின் பொதுப் போக்குவரத்து அமைப்பின் முதுகெலும்பாக மெட்ரோவின் பங்கை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், கட்டுமானத்தின் போது போக்குவரத்து, அன்றாட வாழ்க்கை மற்றும் தற்போதுள்ள உள்கட்டமைப்பில் ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதற்காக, இந்தத் திட்டம் மேம்பட்ட சுரங்கப்பாதை தொழில்நுட்பங்களைப் (advanced tunnelling technologies) பயன்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துபாய் மெட்ரோவின் விரிவாக்கம்
புதிதாக கோல்டு லைன் மற்றும் ப்ளூ லைன் சேர்க்கப்படுவதால், துபாய் மெட்ரோ நெட்வொர்க் 120 கி.மீ-லிருந்து 162 கி.மீ-ஆக விரிவடையும், அதே நேரத்தில் நிலையங்களின் எண்ணிக்கை 67-லிருந்து 85-ஆக அதிகரிக்கும், இது 35 சதவிகித வளர்ச்சியாகும்.
2009-ல் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த மெட்ரோ ரயில் 2.8 பில்லியனுக்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது, இதில் 2025-ல் 29.5 மில்லியன் பயணிகளும் அடங்குவர். இது துபாயின் மொத்த பொதுப் போக்குவரத்து பயன்பாட்டில் சுமார் 40 சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel