ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்றும் (செவ்வாய்க்கிழமை) நாட்டின் சில பகுதிகளில் லேசான மழையை எதிர்பார்க்கலாம் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிவித்துள்ளது, குறிப்பாக மேற்குப் பிராந்தியங்களில் மேகமூட்டமான சூழல் உருவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
NCM வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின் படி, இன்றைய தினம் ஒட்டுமொத்தமாக வானிலை தெளிவாகவோ அல்லது பகுதியளவு மேகமூட்டத்துடனோ காணப்படும். அவ்வப்போது மேகமூட்டம் அதிகரிக்கும்போது, லேசான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், காற்றின் வேகம் லேசானது முதல் மிதமானது வரை இருக்கும் என்றும், அவ்வப்போது காற்றின் வேகம் அதிகரித்து, புழுதி மற்றும் மணலை கிளப்பிவிடக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 10 முதல் 25 கி.மீ வரையிலும், காற்று வீச்சுகள் (gusts) மணிக்கு 40 கி.மீ வரையிலும் எட்டக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
கடல் நிலைமைகளைப் பொறுத்தவரை, அரபிக்கடலில் கடல் சீற்றம் அதிகமாகவும், ஓமன் கடலில் மிதமானது முதல் அதிகமானது வரையிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், வெப்பநிலை மிதமான அளவிலேயே நீடிக்கும் என்றும் மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக அபுதாபியில் சுமார் 27°C, துபாயில் 26°C மற்றும் ஷார்ஜாவில் 27°C வெப்பநிலை பதிவாகக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், அல் அய்ன் போன்ற உள் பகுதிகளில் வெப்பநிலை 30°C வரை எட்டக்கூடும். அதேவேளையில், ஃபுஜைராவில் வெப்பநிலை சற்று அதிகமாக, சுமார் 34°C அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், கடலோரப் பகுதிகளில் ஈரப்பதத்தின் அளவு 85 சதவீதம் வரை உயரக்கூடும். இதனால் இரவு நேரத்திலும், அதிகாலை நேரங்களிலும் ஈரப்பதம் மிகுந்த சூழல் நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel