ADVERTISEMENT

ஊழியர்களுக்கு 20 வார போனஸ் வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்த எமிரேட்ஸ் நிறுவனம்!!

Published: 7 May 2026, 5:58 PM |
Updated: 7 May 2026, 5:58 PM |
Posted By: Menaka

எமிரேட்ஸ் குழுமம் 2025-26 நிதியாண்டில் சாதனை அளவிலான லாபத்தைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, அதன் ஊழியர்களுக்கு 20 வார கால மாபெரும் சம்பள போனஸை வெகுமதியாக வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.

ADVERTISEMENT

13 வார செயல்திறன் இலக்குடன் போனஸ் வழங்கப்படும் என்ற முந்தைய எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு, இந்த போனஸ் ஊழியர்களுக்கு ஒரு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இது தொடர்பாக எமிரேட்ஸ் ஏர்லைன் மற்றும் குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகியான ஷேக் அஹ்மத் பின் சயீத் அல் மக்தூம் அவர்கள், ஊழியர்களுக்கு அனுப்பிய மனமார்ந்த இமெயிலில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் சம்பந்தப்பட்ட பிராந்திய மோதலால் ஏற்பட்ட செயல்பாட்டுத் தடங்கல்களால் குறிக்கப்பட்ட மிகவும் சவாலான காலகட்டத்தில் ஊழியர்கள் முன்வந்து உதவினர் என்று கூறியதுடன், நிறுவனத்தின் வரலாற்றில் மிகவும் கடினமான காலகட்டங்களில் ஒன்றில் அழைக்கப்பட்ட போது அர்ப்பணிப்புடனும் பேரார்வத்துடனும் செயல்பட்டதற்காக ஊழியர்களைப் பாராட்டியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், “மார்ச் 2026 நினைவிலிருந்து மறைந்துவிடும், ஆனால் உங்கள் தைரியத்தையும் நம்பமுடியாத மன உறுதியையும் நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதியாண்டின் இறுதி மாதத்தில் ஏற்பட்ட நெருக்கடிக்கு மத்தியிலும், எமிரேட்ஸ் வரிக்கு முந்தைய சாதனை லாபம், வருவாய் மற்றும் ரொக்க இருப்பு ஆகியவற்றில் சாதனை அளவில் சாதித்ததாக எமிரேட்ஸ் குழுமம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதுமட்டுமில்லாமல், நெருக்கடியின் போது, ஆயிரக்கணக்கான பயணிகள் தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைவதற்கும், அவசரநிலைகளைக் கையாளுவதற்கும், அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் எமிரேட்ஸையே சார்ந்திருந்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஈரானுடன் தொடர்புடைய மோதலால் வளைகுடா வான்வெளியில் ஏற்பட்ட இடையூறுகளுக்குப் பிறகு, செயல்பாடுகளை விரைவாக மீட்டெடுக்க உதவியதற்காக எமிரேட்ஸ் மற்றும் டினாட்டா (dnata) ஊழியர்களுக்கும் அவர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

அவரது கூற்றுப்படி, மார்ச் மாத இறுதிக்குள், எமிரேட்ஸ் தனது விமானத் திறனில் 58%-ஐ மீட்டெடுத்திருந்தது.

அதேபோல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பரந்த பிராந்தியம் முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்தை உறுதி செய்ததற்காக சரக்குக் குழுக்கள் குறிப்பாகப் பாராட்டப்பட்டன.

இத்தகைய நெருக்கடியின் போது துபாயின் எதிர்காலத்தைக் கேள்விக்குட்படுத்திய விமர்சகர்களுக்குப் பதிலளித்த ஷேக் அகமது, நகரமும் விமான நிறுவனக் குழுமமும் முன்பை விட வலுவாக மீண்டு வரும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், “ஒரு நெருக்கடிக்குப் பிறகு நாங்கள் எப்போதும் செய்வது போலவே, இன்னும் பெரியதாகவும், சிறந்ததாகவும், மேலும் துணிச்சலாகவும் மீண்டு வருகிறோம்,” என்று உறுதிபட கூறியுள்ளார்.

அதேசமயம், பிராந்தியப் பதற்றங்கள், விநியோகச் சங்கிலிப் பிரச்சினைகள் மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் உள்ளிட்ட தற்போதைய சவால்களை அவர் ஒப்புக்கொண்டாலும், நிறுவனத்தின் நீண்டகால எதிர்காலம் குறித்து நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

அடுத்தகட்ட நகர்வாக, விரைவில் இயல்பான விமானப் பயண அட்டவணைகளை மீண்டும் தொடங்குதல், புதிய விமானங்களைத் தொடர்ந்து பெறுதல் மற்றும் தனது முக்கிய விமானக் குழுமப் புனரமைப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல் ஆகியவற்றை எமிரேட்ஸ் குழுமம் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.

ஆகவே, துபாயின் எதிர்காலத்தின் மீதும், எமிரேட்ஸ் குழுமத்தின் மீள்திறனின் மீதும் ஊழியர்கள் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் என்று ஷேக் அகமது வலியுறுத்தியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel