ஐக்கிய அரபு அமீரகத்தில் வரவிருக்கும் வாரம் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும் என்று நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. இருப்பினும், நாட்டின் சில பகுதிகளில் மிதமான காற்று, புழுதி நிறைந்த சூழல் மற்றும் கடல் சீற்றம் ஆகியவற்றை மக்கள் எதிர்பார்க்கலாம் என்றும் கூறியுள்ளது.
தற்போது நாட்டின் வானிலை, பலவீனமான மேற்பரப்பு அழுத்த அமைப்புகளும் (surface pressure systems) மேல் வளிமண்டல உயர் அழுத்தத்தின் நீட்சியும் (upper-air high-pressure extension) இணைந்து ஏற்படுத்தும் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலையான வானிலை நிலவுவதாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்த வாரம் முழுவதும், வானம் பெரும்பாலும் தெளிவாகவோ அல்லது பகுதி அளவு மேகமூட்டத்துடனோ காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், மிதமான காற்று அவ்வப்போது வலுப்பெற்று, குறிப்பாக திறந்த மற்றும் வெட்டவெளியான பகுதிகளில் புழுதியையும் மணலையும் கிளப்பும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் நிலைமைகளைப் பொறுத்தவரை, அரபிக்கடலில் கடல் சூழல் படிப்படியாக மோசமடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, புதன்கிழமை முதல் கடல் மிதமான கொந்தளிப்புடன் காணப்பட்டு, வெள்ளிக்கிழமைக்குள் முழுமையான கொந்தளிப்பு நிலையை அடையக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. அதே சமயம், ஓமன் கடற்பகுதி ஒப்பீட்டளவில் அமைதியாகவும், லேசான அலைகளுடனும் காணப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாடு முழுவதும் வெப்பநிலை தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடலோர மற்றும் தீவுப் பகுதிகளில் வெப்பநிலை 35°C முதல் 40°C வரை பதிவாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உட்புற பகுதிகளில் வெப்பநிலை 42°C முதல் 46°C வரை உயரக்கூடும் என்றும், மலைப்பாங்கான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 32°C முதல் 39°C வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடலோரப் பகுதிகளில் தென்மேற்கு முதல் வடமேற்கு திசை காற்றானது மணிக்கு 40 கி.மீ. வரையிலும், நாட்டின் உள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் மணிக்கு 35 கி.மீ. வரையிலும் வீசக்கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆகவே, காற்றினால் கிளம்பும் புழுதியால் ஏற்படும் குறைந்த காட்சித்திறன் (reduced visibility) கொண்ட நேரங்களிலும், வாரத்தின் பிற்பகுதியில் கடல் கொந்தளிப்பு அதிகரிக்கும்போதும், வாகன ஓட்டிகள் மற்றும் கடல் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel