அமீரகம் முழுவதும் புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னதாகத் தொடங்கப்பட்ட வருடாந்திர சாலைப் பாதுகாப்புப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சாலை விதிகளைப் பின்பற்றி பாதுகாப்பாக வாகனங்களை ஒட்டுவதன் மூலம், வாகன ஓட்டிகள் தங்கள் ஓட்டுநர் பதிவேடுகளில் இருந்து நான்கு போக்குவரத்துப் புள்ளிகளை (black points) நீக்குவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிய கல்வி ஆண்டு தொடங்கும் நாளான ஆகஸ்ட் 31 அன்று, “விபத்துகள் இல்லாத நாள்” (Day Without Accidents) பிரச்சாரம் நடைபெறும் என்றும், இதற்கான பதிவு, ஆகஸ்ட் 17, திங்கட்கிழமை அன்று தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள காவல் படைகளுடன் இணைந்து கூட்டாட்சிப் போக்குவரத்துக் கழகத்தால் (Federal Traffic Council) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பிரச்சாரம், பள்ளிகளைச் சுற்றியுள்ள சாலைகள் நெரிசலாகி வருவதால், வாகன ஓட்டிகளைப் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றவும், அதிக எச்சரிக்கையுடன் செயல்படவும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாகன ஓட்டிகள் நான்கு போக்குவரத்துப் புள்ளிகளை எவ்வாறு நீக்கலாம்?
பங்கேற்க விரும்பும் தகுதியுள்ள ஓட்டுநர்கள் பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்:
- உள்துறை அமைச்சகத்தின் சமூக ஊடகக் கணக்குகளில் MOIUAE என்ற பெயரில் பகிரப்பட்டுள்ள இணைப்பு மூலம் பதிவு செய்ய வேண்டும்.
- பிரச்சாரத்தின் பாதுகாப்பு உறுதிமொழியில் கையெழுத்திட வேண்டும்.
- ஆகஸ்ட் 31 அன்று குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
இந்த நிபந்தனைகளை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யும் வாகன ஓட்டிகளின் பதிவுகளிலிருந்து நான்கு போக்குவரத்துப் புள்ளிகள் கழிக்கப்படும்.
கல்வியாண்டின் முதல் நாளில் பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதிகாரிகள் அங்கு சாலைப் பாதுகாப்பிற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்படுவது:
- குறிப்பாகப் பள்ளிப் பகுதிகளில் வேக வரம்புகளைப் பின்பற்ற வேண்டும்.
- வாகனம் ஓட்டும்போது மொபைல் போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
- ஒதுக்கப்பட்ட பாதைகளுக்குள் இருக்க வேண்டும்.
- மற்ற வாகனங்களிலிருந்து பாதுகாப்பான தூரத்தைப் பராமரிக்க வேண்டும்.
- சாலையைக் கடக்கும்போது பாதசாரிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
- பயணத்தைத் தொடங்குவதற்கு முன், தங்கள் வாகனங்கள் சாலைக்கு உகந்தவையா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
- குழந்தைகள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயனாளிகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
இந்த முயற்சி, ஒரு நாள் மட்டும் பாதுகாப்பான ஓட்டுதலை ஊக்குவிப்பதற்காக அல்ல என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாறாக, வாகன ஓட்டிகளைப் பொறுப்பான ஓட்டும் பழக்கங்களை அன்றாட நடத்தையாக மாற்றிக்கொள்ள ஊக்குவிப்பதும், ஆண்டு முழுவதும் அமீரகச் சாலைகளைப் பாதுகாப்பானதாக வைத்திருக்க உதவுவதுமே இதன் நோக்கமாகும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel