துபாயின் பொதுப் போக்குவரத்தில் அதிக பயணிகளை கையாள்வதில் துபாய் மெட்ரோதான் எப்போதும் முதலிடத்தில் இருந்து வருகிறது. தற்போது துபாய் மக்கள் தொகை பெரிய அளவில் அதிகரித்து வருவதால் அதற்கேற்ப துபாய் மெட்ரோ சேவையை மேலும் விரிவுபடுத்துவதற்கான திட்டங்களையும் துபாய் அரசு முன்னெடுத்து வருகிறது.
அதன் வரிசையில், ‘Rail Network Plan 2032’ என்ற திட்டத்தின் கீழ் புதிதாக வரவிருக்கும் ‘கோல்ட் லைன் மெட்ரோ (Gold Line Metro)’ சேவையின் முழு வழித்தடத்தின் வரைபடத்தையும் துபாய் வெளியிட்டுள்ளது. இது துபாய் முழுவதும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவட்டங்களை வேகமாக வளர்ந்து வரும் புறநகர்ப் பகுதிகளுடன் இணைக்கவிருக்கும் ஒரு முக்கிய மெட்ரோ வழித்தடமாகும்.
இந்த புதிய வழித்தடம் அல் குபைபாவில் தொடங்கி, முக்கிய குடியிருப்பு மற்றும் வணிக மையங்கள் வழியாகச் சென்று, நகரம் முழுவதும் பயணித்து ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட்ஸில் முடிவடையும். மேலும் இந்த மெட்ரோ வழித்தடம் முழுவதும் பூமிக்கு அடியில் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய இணைப்புகள் மற்றும் இன்டர்சேஞ்ச் மையங்கள்
இது தொடர்பாக வெளியான அறிக்கைகளின் படி, கோல்ட் லைன் மிகவும் ஒருங்கிணைந்த வழித்தடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது தற்போதுள்ள மெட்ரோ வழித்தடங்களுடன் பல புள்ளிகளில் இணைகிறது:
- அல் குபைபாவில் கிரீன் லைனுடன் இணைப்பு
- புர்ஜுமானில் ரெட் மற்றும் கிரீன் லைன்கள் இரண்டிலும் பயணிகள் பரிமாற்ற மையம்
- பிசினஸ் பேயில் ரெட் லைனுடன் இணைப்பு
அதுமட்டுமில்லாமல், ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட்ஸில் எதிஹாட் ரெயில் நிலையத்துடன் இந்த வழித்தடம் ஒருங்கிணைக்கப்படுவது ஒரு முக்கிய சிறப்பம்சமாகும். இது துபாயின் மெட்ரோவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய ரயில் நெட்வொர்க்கிற்கும் இடையே நேரடி இணைப்பை உருவாக்குகிறது. மேலும், எதிர்காலத்தில் மைதானில் (Meydan) மற்றொரு இன்டர்சேஞ்ச் மையமும் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.

துபாய் அரசாங்க ஊடக அலுவலகத்தால் பகிரப்பட்ட வரைபடத்தின் படி, அல் குபைபாவிலிருந்து, இந்த வழித்தடம் பர் துபாய் மற்றும் அல் சத்வா வழியாகச் சென்று, பின்னர் பிசினஸ் பேயுடன் இணையும். அதன்பிறகு மைதான், அல் பர்ஷா சவுத் மற்றும் ஜுமைரா வில்லேஜ் டிரையாங்கிள் வழியாகத் தொடரும். இது துபாய் புரொடக்ஷன் சிட்டிக்கும் சேவையாற்றி, இறுதியாக ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட்ஸில் உள்ள அதன் இறுதி நிறுத்தத்தை அடையும். அங்கிருந்து எக்ஸ்போ சிட்டிக்கு மேலும் இணைப்பு வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளியான தகவல்களின் படி, கோல்டு லைனைப் பொறுத்தவரை, 15 முக்கிய இடங்களில் 18 நிலையங்களுடன் கூடிய 42 கி.மீ நீளமுள்ள ஒரு நிலத்தடி வழித்தடமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. 40 மீட்டர் வரையிலான ஆழத்தில் அமைக்கப்படவுள்ள இந்த வழித்தடம், சுமார் 1.5 மில்லியன் குடியிருப்பாளர்களுக்குச் சேவையாற்றும் என்றும், 55-க்கும் மேற்பட்ட முக்கிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், 2040-ஆம் ஆண்டளவில், தினசரி பயணிகளின் எண்ணிக்கை 465,000-ஐ எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், 20 ஆண்டுகளில் இதன் நீண்டகாலப் பொருளாதார வருமானம் 430 சதவீதம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எமிரேட்டில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு போக்குவரத்து வலையமைப்பை உருவாக்கும் துபாயின் பரந்த உத்தியின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது. நெரிசலைக் குறைக்கவும், மாசு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும், மெட்ரோ வழித்தடங்களை தேசிய இரயில் மற்றும் பிற போக்குவரத்து அமைப்புகளுடன் இணைப்பதில் கவனம் செலுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தத் திட்டம் ராஸ் அல் கோர் பகுதியிலிருந்து எக்ஸ்போ சிட்டிக்கு அப்பால் உள்ள பிற பகுதிகளையும் இணைக்கும் வகையில் எதிர்கால அதிவேக இரயில் வழித்தடம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதையும் இந்த புதிய ரயில் நெட்வொர்க் திட்டம் குறிப்பிடுகிறது, இருப்பினும் அதன் விவரங்கள் தற்போது வெளியிடப்படவில்லை.
ஆகவே, இத்திட்டம் முழுமையாக நிறைவடைந்ததும், பழைய மற்றும் புதிய துபாயை இணைப்பதில் மையப் புள்ளியாக துபாய் மெட்ரோ முக்கிய பங்காற்றுவதுடன், பரந்த ஐக்கிய அரபு அமீரக இரயில் வலையமைப்பான எதிஹாட் ரயில் நெட்வொர்க் உடனான இணைப்புகளையும் வலுப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel