ஐக்கிய அரபு அமீரகத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பயணிகள் ரயில் சேவைத் திட்டம் இறுதியாக தொடங்கும் தருவாயில் உள்ளது. அதன்படி அபுதாபி, துபாய் மற்றும் ஃபுஜைராவில் உள்ள தனது முதல் பயணிகள் நிலையங்கள் நடப்பு ஆண்டில் செயல்படத் தொடங்கும் என எதிஹாட் ரயில் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
பயணிகளை வரவேற்கத் தயாராக உள்ள முதல் நிலையங்கள், அபுதாபியில் உள்ள முகமது பின் சையத் சிட்டி, துபாயில் உள்ள ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட்ஸ் மற்றும் ஃபுஜைரா ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. ஃபுஜைரா நிலையம் ஏற்கனவே முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுவிட்டதாகவும், அபுதாபி மற்றும் துபாய் நிலையங்கள் தற்போது இறுதித் தயாரிப்புப் பணிகளில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த அதிவேக பயணிகள் ரயில்கள் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் என்றும், இதன் மூலம் பயணிகள் அபுதாபியிலிருந்து ஃபுஜைராவை வெறும் 105 நிமிடங்களில் சென்றடைய முடியும் என்றும் எதிஹாட் ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது நாடு முழுவதும் மக்கள் பயணிக்கும் விதத்தில் ஒரு பெரிய மாற்றமாகும்.
ஊடக முன்னோட்டத்தின் போது பேசிய எதிஹாட் ரயில் மொபிலிட்டியின் வர்த்தகப் பிரிவு நிர்வாக இயக்குநர் அத்ரா அல்மன்சூரி, பயணிகள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு, செயல்பாட்டுத் தயார்நிலை, பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதே தற்போது முக்கியக் கவனம் என்று கூறியுள்ளார்.
மேலும், டிக்கெட் விலைகள் மற்றும் பயணத் தொகுப்புகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், ஆனால் சேவைகள் தொடங்கியவுடன் பயணிகள் பல்வேறு தளங்கள் மற்றும் இயந்திரங்கள் மூலம் எளிதாக டிக்கெட்டுகளை வாங்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சாலைப் போக்குவரத்திற்கு வேகமான, பாதுகாப்பான மற்றும் நீடித்த மாற்றீட்டை வழங்குவதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் தினசரி பயணத்தை மாற்றியமைக்கும் வகையில் இந்த நெட்வொர்க் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று எதிஹாட் ரயில் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
“போக்குவரத்து நெரிசலைப் பற்றிக் கவலைப்படாமல் பயணத்தை அனுபவிக்க இந்த ரயில் வசதி, ஓய்வு மற்றும் வாய்ப்பை வழங்கும்,” என்று குறிப்பிட்ட அல்மன்சூரி, மக்கள் அடர்த்தி, போக்குவரத்துத் தேவை மற்றும் தேசிய வளர்ச்சித் திட்டங்களுடன் அதன் ஒத்திசைவு உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் ரயில் நிலையங்களின் இருப்பிடங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்பதையும் விளக்கினார்.
அந்தவகையில், ஃபுஜைரா ரயில் நிலையத்தைப் பொறுத்தவரை, ஃபுஜைரா போர்ட், ஃபுஜைரா ஃப்ரீ சோன், ஃபுஜைரா சர்வதேச விமான நிலையம் மற்றும் முக்கிய சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட முக்கிய பொருளாதார மற்றும் சுற்றுலா மையங்களுக்கு அருகில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ளதாக அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், ஐக்கிய அரபு அமீரகம் புதிய மூலோபாய இடங்களையும் உள்கட்டமைப்புத் திட்டங்களையும் தொடர்ந்து உருவாக்கி வருவதால், விரிவாக்கத் திட்டங்கள் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முழுமையாகச் செயல்படத் தொடங்கியதும், எதிஹாட் ரயில் பயணிகள் வலையமைப்பு, நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளை இணைக்கும் 11 நிலையங்களைக் கொண்டிருக்கும். இது ஐக்கிய அரபு அமீரகத்தில் போக்குவரத்து, சுற்றுலா, வணிகம் மற்றும் தினசரிப் பயணங்களை மறுவடிவமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் பயணிகள் நிலையங்கள் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், எதிஹாட் ரயில் (Etihad Rail) கட்டமைப்பின் எஞ்சிய பகுதிகள் எவ்வளவு விரைவாகச் செயல்படுத்தப்படும் என்பதிலும், எதிர்கால விரிவாக்கங்கள் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பயணம் மற்றும் இணைப்பை எவ்வாறு உருமாற்றும் என்பதிலும் அமீரகவாசிகளின் கவனம் திரும்பி வருகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel