சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) சமீபத்திய நிதிநிலை அறிக்கையின்படி, 2026-ஆம் ஆண்டில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள விமான நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக 4.3 பில்லியன் டாலர் இழப்பைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உலகிலேயே நஷ்டத்தில் இயங்கும் ஒரே பிராந்தியமாக இது இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற IATA-வின் வருடாந்திரக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, வளைகுடா பிராந்தியத்தில் விமானப் போக்குவரத்துத் துறையின் மீது அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல்கள் ஏற்படுத்தியுள்ள கடுமையான தாக்கத்தை சுட்டிக்காட்டுகிறது.
முன்னதாக, மத்திய கிழக்கில் ஒரு பயணியிடமிருந்து கிடைக்கும் லாபம் 2025-ல் 31.50 டாலர் ஆக இருந்த நிலையில், 2026-ல் அது ஒரு பயணியிடமிருந்து 21.40 டாலராக மாறும் என்று IATA எதிர்பார்க்கிறது.
மேலும், பயணிகளின் தேவை 11.4 சதவீதம் குறையும் என்றும், விமான நிறுவனங்களின் சேவைத் திறன் (capacity) 4.4 சதவீதம் சுருங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதே போல் நிகர லாப வரம்பு 2025-ல் 9.4 சதவீதத்திலிருந்து, இந்த ஆண்டில் 6.1 சதவீதமாக (minus 6.1%) கடுமையாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தெரிவிக்கையில் “போரினால் ஏற்படும் அதிர்வுகளின் மையத்தில் மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ளது. எனவே 2026-ல் இது நிகர இழப்பைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று IATA கூறியுள்ளது.
அதுமட்டுமில்லாமல், பிராந்திய பதற்றங்கள் காரணமாக வான்வெளி மூடப்படுதல், விமானங்கள் ரத்து செய்யப்படுதல், பயணப் பாதைகள் மாற்றப்படுதல் மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்கள் ஆகியவற்றால் முக்கிய வளைகுடா விமான நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
IATA-வின் தலைமை இயக்குநர் வில்லி வால்ஷ் (Willie Walsh) அவர்களின் கூற்றுப்படி, பிராந்திய வான்வெளியில் விதிக்கப்பட்டுள்ள பரவலான கட்டுப்பாடுகளால் வளைகுடா விமான நிறுவனங்கள் பெரும் நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டு வருகின்றன.
ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா இடையே பயணிக்கும் இணைப்புப் பயணிகளை (connecting passengers) பெரிதும் நம்பியிருக்கும் விமான நிறுவனங்களில், இடமாற்றப் போக்குவரத்து (transfer traffic) குறைந்துள்ளது. இதனால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து, செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகளாவிய விமான நிறுவனங்களின் லாபமும் சரிவு
உலகளவில் விமான நிறுவனங்கள் தொடர்ந்து லாபத்தில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், வருவாய் கணிசமாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய விமான நிறுவனங்களின் லாபம் 2025-ல் 45 பில்லியன் டாலரிலிருந்து 2026-ல் 23 பில்லியன் டாலராகக் குறையும் என்றும், அதேவேளையில் இத்துறையின் லாப வரம்பு 4.2 சதவீதத்திலிருந்து 2.0 சதவீதமாகக் குறையும் என்றும் IATA கணித்துள்ளது. உலகளவில் ஒரு பயணியிடமிருந்து கிடைக்கும் நிகர லாபம் 9.10 டாலரிலிருந்து 4.50 டாலராகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெட் எரிபொருள் விலைகள் உயர்வு
இதற்கிடையில், விமான நிறுவனங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக, தொடர்ந்து உயரும் எரிபொருள் விலைகள் உள்ளன.
2025-ல் ஒரு பீப்பாய் எரிபொருளின் விலை 90 டாலராக இருக்கும் நிலையில், 2026-ல் அது 152 டாலராக உயரும் என்று IATA கணிக்கிறது.
இதன் விளைவாக:
- உலகளாவிய விமான நிறுவனங்களின் எரிபொருள் செலவு 252 பில்லியன் டாலரிலிருந்து 350 பில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- விமான நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவுகளில் எரிபொருள் செலவு 31 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும்.
- இத்துறையின் மொத்த எரிபொருள் செலவு சுமார் 100 பில்லியன் டாலர் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயணங்களுக்கான தேவை வலுவாக உள்ளது
அதிகரித்த இயக்கச் செலவுகள் மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும், பயணிகளிடமிருந்து வரும் தேவை வலுவாகவே உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
2026-ல் விமான நிறுவனங்களின் மொத்த வருவாய் 9.4 சதவீதம் அதிகரித்து 1.165 டிரில்லியன் டாலரை எட்டும் என்று IATA எதிர்பார்க்கிறது.
குறிப்பாக, டிக்கெட் விற்பனை மூலம் மட்டும் கிடைக்கும் வருவாய் 839 பில்லியன் டாலரை எட்டும் என்றும், விமான இருக்கை பயன்பாட்டு விகிதம் (load factor) சாதனை அளவாக 84 சதவீதத்தை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய IATA ஆய்வுகள் பின்வருவனவற்றைக் கண்டறிந்துள்ளன:
- 49 சதவீத பயணிகள் இந்த ஆண்டு பயணத்திற்காக அதிக செலவு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
- 43 சதவீத பயணிகள் கடந்த ஆண்டைப் போலவே செலவு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில், விமானம் மற்றும் இயந்திரங்களுக்கான தட்டுப்பாடும் தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளன. விமானப் போக்குவரத்துத் துறை தொடர்ந்து விநியோகச் சங்கிலிச் சிக்கல்களையும் எதிர்கொண்டு வருகிறது.
IATA-வின் தகவல்படி:
- உலகளவில் வழங்கப்பட வேண்டிய விமானங்களின் நிலுவை எண்ணிக்கை (order backlog) 18,000 விமானங்களுக்கும் அதிகமாக உள்ளது.
- விமானங்களின் சராசரி வயது சாதனை அளவாக 15.2 ஆண்டுகளை எட்டியுள்ளது.
- 2025-ல் விநியோகச் சங்கிலித் தடங்கல்களால் விமான நிறுவனங்களுக்குக் குறைந்தது 11 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பல விமான நிறுவனங்கள் பழைய விமானங்களை நீண்ட காலத்திற்குப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதனால் பராமரிப்புச் செலவுகள் மற்றும் குத்தகைச் செலவுகள் அதிகரிப்பதோடு, எரிபொருள் சிக்கனத் திறனும் குறைகிறது என்று அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
ஒருபக்கம், பயணங்களுக்கான வலுவான தேவை விமான நிறுவனங்கள் சில சவால்களைச் சமாளிக்க உதவியாக இருந்தாலும், எரிபொருள் விலை உயர்வு, புவிசார் அரசியல் ஸ்திரமின்மை, விமானங்களின் பற்றாக்குறை மற்றும் விநியோகச் சங்கிலித் தடைகள் ஆகியவை 2026-ஆம் ஆண்டு முழுவதும் விமான நிறுவனங்களின் லாபத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று IATA எச்சரித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்களைப் பொறுத்தவரை, பிராந்திய மோதல்கள், வான்வெளிப் பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் அதிகரித்த செயல்பாட்டுச் செலவுகள் ஆகிய காரணிகளின் கூட்டுத் தாக்கத்தால், அப்பிராந்தியத்தின் விமானப் போக்குவரத்துத் துறைக்கு 2026-ஆம் ஆண்டு சமீப காலத்திலேயே மிகவும் சவாலானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel