பேட்மிண்டன் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துபாயில் நிகழ்ந்துள்ளது. துபாயில் கேரளாவைச் சேர்ந்த 42 வயது நபர் விளையாடிக்கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார்.
உயிரிழந்தவர் திருச்சூர் மாவட்டம் சாதிக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரின் இறப்பு குறித்து உறவினர் ஒருவர் கூறுகையில், “அவர் தனது இடது கையில் வலிப்பதாகக் கூறிவிட்டு விளையாட்டில் இருந்து வெளியேறினார். அப்போது அவரது ரத்த அழுத்தம் சீராக இருந்ததாக தெரிவித்தார்.
அதன்பிறகு அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, எலுமிச்சை சோடா அருந்திய பிறகு வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்தார். ஆனால், வாகன நிறுத்துமிடத்தில் இருந்த காருக்குள்ளேயே அவர் மயங்கி விட்டார்” என்று தெரிவித்துள்ளார். பின்னர் ஆம்புலன்ஸிற்கு அழைப்பு விடுத்தும் முதலுதவி செய்தும் கூட அவரை காப்பாற்ற முடியவில்லை. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் தான் இது போன்ற விளையாட்டு நடவடிக்கையின்போது துபாயில் வசிக்கும் கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்திருந்தார். தற்பொழுது மற்றொரு துயரச் சம்பவம் சில நாட்களிலேயே நிகழ்ந்துள்ளது.
முன்னதாக துபாயில் வசித்து வந்தவரும், கிரிக்கெட் வீரருமான 38 வயது முகமது சஃப்வான் ஷானு, கிரிக்கெட் போட்டியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவர் ஆரோக்கியமாகத் தெரிந்ததாகவும், வார இறுதி விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்ததாகவும் நண்பர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து துபாயில் நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் தற்பொழுது இது போன்றே மற்றொரு சம்பவம் தற்பொழுது நிகழ்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.