ADVERTISEMENT

அமீரகத்தில் இயல்பு நிலைக்கு திருப்பும் வேலை வாய்ப்புகள்..!! 74% நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை அமர்த்த முடிவு..!!

Published: 2 Apr 2021, 9:57 AM |
Updated: 2 Apr 2021, 10:11 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கொரோனா தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் தற்பொழுது அதில் இருந்து மீண்டு வந்து திரும்பவும் பல்வேறு பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு (recruitement) செய்யவிருப்பதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு புதிய ஆய்வில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய வேலைவாய்ப்பு மற்றும் பணியமர்த்தல் தகவலின்படி, நிறுவனங்கள் எதிர்காலத்தில் தயாராகும் அணுகுமுறையை எடுத்து வருகின்றன. மேலும் டிஜிட்டல் மயமாக்கல் (digitalisation), இடர் மேலாண்மை (risk management) மற்றும் நிதி ஆலோசனை (finance consulting) ஆகியவற்றில் நிபுணத்துவம் வாய்ந்த திறமையான நபர்களை அதிகளவில் வேலைக்கு பணியமர்த்தி வருவதற்காக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள விமான போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு செயல்பாடுகள் போன்ற துறைகள் மெதுவாக மீண்டு வருகின்ற அதே வேளையில் சுகாதாரத் துறை புதிய திறமைசாலிகளுக்கான வலுவான கோரிக்கையை பதிவு செய்து வருகிறது.

bayt.com-ன் மனிதவள இயக்குனர் ஓலா ஹடாட் கூறுகையில், “கோவிட் -19 தொற்றுநோய் சந்தேகத்திற்கு இடமின்றி கடந்த ஆண்டு பல தொழில்களை கடுமையாக தாக்கியுள்ளது. ஆனால் சமீபத்திய மருத்துவ முன்னேற்றங்கள் மற்றும் நிலையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் உதவியுடன் வேலைவாய்ப்பு சந்தை படிப்படியாக புத்துயிர் பெறுகிறது. உலகளாவிய நிபுணர்களுக்கு 2020 ஒரு சவாலான ஆண்டாக இருந்தபோதிலும், 2021 சிறந்த ஆண்டாக இருக்கும். குறிப்பாக இது ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை தேடுபவர்களுக்கு சிறந்த பலனளிக்கும். Bayt.com சமீபத்தில் நடத்திய வேலை குறியீட்டு கணக்கெடுப்பின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனங்களில் 74 சதவீதம் பேர் அடுத்த ஆண்டில் புதியவர்களை வேலைக்கு அமர்த்த விரும்புகிறார்கள் என்று தெரியவந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பான்மையான நிறுவனங்கள் நுழைவு நிலை ஊழியர்களை (entry level staff) குறிப்பாக ஜூனியர் எக்ஸிக்யூடிவ்ஸ்களை (junior executives) பணியமர்த்தும் என்று கணக்கெடுப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன. கூடுதலாக, விற்பனை நிர்வாகிகள் (sales executives), வரவேற்பாளர்கள் (receptionists) மற்றும் விற்பனை மேலாளர்கள் (sales managers) போன்றோர் ஐக்கிய அரபு அமீரக நிறுவனங்கள் தேடும் முக்கிய துறைகளாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், எண்ணெய் / எரிவாயு / பெட்ரோ கெமிக்கல்ஸ், விளம்பரம் / சந்தைப்படுத்தல் / மக்கள் தொடர்புகள் மற்றும் பொறியியல் / வடிவமைப்பு ஆகிய துறைகள் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா பிராந்தியங்களில் அடுத்த ஒரு வருடத்தில் பணியமர்த்துவதற்கான மிக உயர்ந்த நோக்கத்தை நிரூபித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், மைக்கேல் பேஜில் (Michael Page) மத்திய கிழக்கின் பிராந்திய இயக்குனர் ஜோன் ஈட் கூறுகையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் வேலைச் சந்தையில் 2021 ம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை உறுதியாகக் கூறுவது கடினம். ஆனால், எட்டு மாதங்களுக்கு முன்பு இருந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது, கடந்த இரண்டு காலாண்டுகளில் அளவிடக்கூடிய முன்னேற்றத்துடன் முற்றிலும் மாறுபாடு அடைந்துள்ளது என்பதை நான் உறுதியுடன் கூறுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும் கூறுகையில், “ஆட்சேர்ப்புத் துறை கொரோனா தொற்றுநோய்க்கு முன் இருந்ததை போல் இன்னும் முழுமையாக வருவதைக் காணவில்லை என்றாலும், 2020 ம் ஆண்டின் இறுதி காலாண்டு மற்றும் 2021 ன் முதல் காலாண்டில் வாராந்திர அல்லது மாதாந்திர அடிப்படையில் நாம் பெறும் வேலைகளின் எண்ணிக்கை கணிசமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலை 2021 ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிலும் தொடரும்” என்று கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “பாரம்பரிய துறைகளான சில்லறை விற்பனை, விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலா ஆகியவை 2020 ஆம் ஆண்டில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டன, மேலும் அவை நெருக்கடியிலிருந்து வெளியேற பல்வேறு புதுமையான வழிகளைக் கையாண்டு வருகின்றன. தொற்றுநோய்க்கு முன்பே, பல சில்லறை பிராண்டுகள் போட்டி மற்றும் மாறிவரும் நுகர்வோர் பழக்கவழக்கங்களைத் தொடர ஆன்லைன் விற்பனை சேனல்களை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் அவை கடுமையான பாதிப்புக்குள்ளாகின. இருந்தபோதிலும் அவை தற்பொழுது மீண்டு வருவதற்கான அறிகுறிகளைக் காட்டுகின்றன. கொரோனாவிற்காக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலக அளவிலும் வழங்கப்பட்டு வரும் தடுப்பூசித் திட்டமும் இதற்கு ஒரு காரணமாகும்” என தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக டிஜிட்டல், தொழில்நுட்பம், வாழ்க்கை அறிவியல், திட்ட ஆலோசனை மற்றும் தொலைத் தொடர்பு போன்ற சில துறைகள் பயனடைந்தன என்பதையும் மறுக்க முடியாது என ஜோன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.