ஓமான்: மே 8 முதல் லாக்டவுன் நேரம் நீட்டிப்பு.. ஈத் பிரார்த்தனைக்கு தடை.. புதிய விதிமுறைகளை வெளியிட்ட உச்ச குழு..!!
ஓமான் நாட்டில் கோவிட் -19 வைரஸ் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த அந்நாட்டு உச்சக் குழு புதிய முடிவுகளை நேற்று வெளியிட்டுள்ளது. உச்சக் குழு வெளியிட்டிருக்கும் புதிய விதிமுறைகளின்படி, ஒமானில் அமலில் இருக்கும் லாக்டவுன் நேரமானது வரும் மே 8 சனிக்கிழமை முதல் மாலை 7 மணியிலிருந்து மறுநாள் காலை 4 மணி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய நேரமானது வரும் மே மாதம் 15 ஆம் தேதி வரையிலும் அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
உணவு விற்பனை நிலையங்கள், சுகாதார நிலையங்கள் மற்றும் எரிவாயு நிலையங்கள் தவிர அனைத்து வணிக நடவடிக்கைகளும் மேற்கூறிய நாட்களில் நாள் முழுவதும் தடைசெய்யப்படும் என்றும் லாக்டவுன் அமலில் இருக்கும் காலத்தில் ஹோம் டெலிவரி செய்ய அனுமதிக்கப்படும் என்றும் உச்சக் குழு கூறியுள்ளது.
மேலும், மே 9 ஞாயிற்றுக்கிழமை முதல் மே 11 செவ்வாய்க்கிழமை வரை, மாநில நிர்வாக அலுவலர்கள் மற்றும் பிற பொது சட்ட பிரிவுகளில் பணிபுரியும் பல்வேறு ஊழியர்கள் தங்கள் பணியிடங்களுக்கு வருவதை இடைநிறுத்தவும், அவர்கள் இந்த தடைகாலத்தில் தொலைதூர பணி முறையை பின்பற்றவும் உச்ச குழு முடிவு செய்துள்ளது. அதேபோன்று தனியார் துறை நிறுவனங்களும் பணியிடத்திற்கு வர வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலமும், தொலைதூரத்தில் பணியாற்றுவதன் மூலமும் தங்களின் வணிகத் தொடர்ச்சியான திட்டங்களை உச்சக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன் புனித ரமலான் மாத இறுதியில் கொண்டாடப்படும் ஈத் அல்-பித்ரின் நாட்களில் ஈத் பிரார்த்தனைகள் மற்றும் பாரம்பரிய ஈத் சந்தைகளை நடத்த வேண்டாம் என்றும், பொதுமக்கள் கூடும் கடற்கரைகள் மற்றும் பொது பூங்காக்கள் உட்பட பல்வேறு இடங்களில் அனைத்து வகையான கூட்டங்களை தடைசெய்யவும், வாழ்த்து கூட்டங்கள் மற்றும் ஈத் கூட்டு கொண்டாட்டங்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடலையும் தடை செய்ய உச்ச குழு முடிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.