அமீரகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பால் பெரும்பாலான பாதுகாப்பு நெறிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. மேலும் அமீரகத்திற்கு பயணிக்கும் பயணிகளுக்கான விதிமுறைகளும் தளர்த்தப்பட்டுள்ளது. இதில் பயணத்திற்கு முந்தைய PCR டெஸ்ட், GDRFA/ICA ஒப்புதல் ஆகியவை அடங்கும்.
இருப்பினும் அமீரகத்திற்கு வரும் சுற்றுலாவாசிகளுக்கான நடைமுறைகளில் சந்தேகம் இருந்ததையடுத்து அமீரக விமான நிறுவனங்கள் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான விதிகளை தெளிவுபடுத்தியுள்ளன.
அபுதாபியின் எதிஹாட் ஏர்வேஸின் இணையதளத்தில் வழங்கப்பட்ட தகவல்களின்படி, தடுப்பூசி போடப்படாத சுற்றுலாப் பயணிகள் அபுதாபிக்கு வருவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பு அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் இருந்து PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் அல்லது 30 நாட்களுக்குள் கொரோனாவில் இருந்து குணமடைந்ததற்கான சான்றிதழை வழங்க வேண்டும்.
ஆனால் முழு தடுப்பூசி போடப்பட்ட சுற்றுலா பயணிகள் எதிர்மறையான PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. மேலும் சுற்றுலா பயணிகள் அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தவுடன் ஒரு சோதனையை மேற்கொள்ள வேண்டும். மேலும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இதேபோல், துபாயின் முதன்மை விமான நிறுவனமான எமிரேட்ஸ் தனது இணையதளத்தில் துபாய்க்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட எதிர்மறை PCR சோதனை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்த தடுப்பூசி சான்றிதழ், WHO (உலக சுகாதார அமைப்பு) அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி மூலம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருப்பதை நிரூபிக்க வேண்டும், மேலும் QR குறியீட்டையும் உள்ளடக்கியிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதேபோல், தடுப்பூசி போடப்படாத பயணிகளுக்கான PCR சோதனைச் சான்றிதழிலும் QR குறியீடு இருக்க வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார சேவை மையத்திலிருந்து சோதனை எடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயணிகள் கொரோனா வைரஸிலிருந்து மீண்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் செல்லுபடியாகும் மருத்துவ சான்றிதழை QR குறியீட்டுடன் வழங்க வேண்டும் என்று எமிரேட்ஸ் ஒரு புதுப்பிப்பில் தெரிவித்துள்ளது.
GCC-யில் இருந்து வருபவர்கள் உட்பட துபாய் பயணிக்கும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் பிப்ரவரி 26 முதல் இந்த புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் துபாய்க்கு வந்தவுடன் PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் மற்றும் எதிர்மறையான முடிவைப் பெறும் வரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். பயணிகளுக்கு சோதனையில் நேர்மறை முடிவு ஏற்பட்டால், உள்ளூர் சுகாதார ஆணையம் வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.