UAE: ரஹ்மான், அனிருத், இளையராஜா வரிசையில் அடுத்து களமிறங்கும் யுவன்..!! பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தவிருப்பதாக அறிவிப்பு..!!
எக்ஸ்போ 2020 துபாய் தனது இறுதிகட்டத்தை அடைந்திருக்கும் வேளையில் தமிழகத்தின் மனம்கவர்ந்த இசையமைப்பாளர்களான AR ரஹ்மான், அனிருத், இளையராஜா ஆகியோர் தங்களின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை எக்ஸ்போ தளத்தில் நடத்தியதை தொடர்ந்து, தற்பொழுது அனைவரின் மனம்கவர்ந்த இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவும் எக்ஸ்போவிற்கு வருகை தரவிருக்கிறார்.
இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி 25 வது வருடம் நிறைவடைய இருக்கும் நிலையில் இதற்கான கொண்டாட்டத்தை யுவன் ஷங்கர் ராஜா எக்ஸ்போவில் நிகழ்த்தவிருக்கிறார். இது குறித்த அறிவிப்பு ஒன்றை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “எக்ஸ்போ 2020 துபாயில் என் 25 வருட இசைப்பயணத்தை கொண்டாடவிருப்பதை எண்ணி மிகவும் எதிர்பார்ப்புடனும் மரியாதையாகவும் நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களின் பிடித்தமான பாடலை தெரியப்படுத்துமாறும் எக்ஸ்போவில் அனைவரையும் காண வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இசைக்கச்சேரியானது வரும் மார்ச் 20 ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று எக்ஸ்போவின் ஜூபிலி பார்க்கில் இரவு 8.30 மணியில் இருந்து துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.