உலகம் முழுவதுமான சுற்றுலாவாசிகளை ஈர்க்கக்கூடிய பிரத்யேக நிகழ்வான துபாயின் குளோபல் வில்லேஜின் தற்போதைய சீசன் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குளோபல் வில்லேஜ் பொதுவாக அமீரகத்தில் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை நடத்தப்படும். இதேபோல் கடந்த வருட அக்டோபரில் துவங்கப்பட்ட குளோபல் வில்லேஜ் வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குளோபல் வில்லேஜின் நடப்பு சீசன் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தற்பொழுது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் 10 ஆம் தேதி முடிவடைய இருந்த குளோபல் வில்லேஜின் 26-வது சீசன் மே 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ட்விட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் “உங்கள் விருப்பம் எங்கள் கட்டளை” என்றும் அந்த ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.
இந்த குளோபல் வில்லேஜின் டிக்கெட் பெற அப்ளிகேஷன் அல்லது ஆன்லைன் வழியாக 15 திர்ஹம்கள் செலவாகும். அதுவே அங்கு சென்று நேரடியாக வாங்கினால் 20 திர்ஹம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பரந்து விரிந்து கிடக்கும் இந்த தீம் பார்க் 1.6 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது மற்றும் சிறந்த ஷாப்பிங், உணவு மற்றும் பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்குகின்றன.
கூடுதலாக, பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு, திகைப்பூட்டும் முக்கிய மேடை விளக்கக்காட்சிகள், ஸ்டண்ட் நிகழ்ச்சிகள், பல நாட்டு பாரம்பரிய உணவு மற்றும் ஏராளமான நிகழ்வுகளைக் கொண்ட ஒரு பெரிய திருவிழாவை நமக்கு வழங்குகிறது.