அமீரகத்தில் ரமலான் மாத நோன்பு துவங்க இன்னும் ஒரு சில நாட்களே இருக்கின்றன. இதில் இந்த வருட ரமலான் மாதத்தில் தராவீஹ் தொழுகை மசூதிகளில் நடத்தப்படுமா என சிலருக்கு சந்தேகம் இருக்கலாம். ஆனால் மசூதிகளில் தொழுகை நடத்தவே அதிகபட்ச வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
தராவீஹ் என்பது புனித ரமலான் மாதத்தில் மசூதிகள் முழுவதும் நடத்தப்படும் இரவு நேரத் தொழுகையாகும். கடந்த 2020 ஆம் ஆண்டில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக முஸ்லிம்கள் மசூதிகளுக்கு பதிலாக வீட்டிலேயே வழிபட்டுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்த 2021 ஆம் ஆண்டில், கடுமையான கொரோனா விதிமுறைகளுடன் மசூதிகளில் தராவீஹ் தொழுகை மீண்டும் தொடங்கியது.
அதனால் இந்த ஆண்டும் மசூதிகளில் தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் வழிபாட்டு சமயத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில், அமீரகத்தில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் மசூதிகளில் தாராவீஹ் தொழுகையும் சாதாரணமாக நடத்தப்படும் என கூறப்படுகிறது.
மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் முழுவதும் தொற்றுநோய்க்கு முந்தைய இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில், NCEMA மசூதிகளில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளை அறிவித்தது.
அதன்படி வழிபாட்டாளர்கள் தொழுகையின் போது முக கவசம் அணிந்து, ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் தூரத்தை பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறை தற்பொழுது நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அமீரகத்தில் ஏப்ரல் 2, புனித மாதத்தின் முதல் நாளாக இருந்தால், ஃபஜ்ர் தொழுகைக்கான அழைப்பு அதிகாலை 4.51 மணிக்கு வழங்கப்படும் என்றும் இஃப்தார் (நோன்பு முடிக்கும் நேரம்) மாலை 6.39 மணி ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது ரமலானின் முதல் நாள் நோன்பு நேரம் 13 மணி 48 நிமிடங்கள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ரமலான் 30 (மே 1) ம் நாள் அன்று ஃபஜ்ர் தொழுகை அழைப்பு அதிகாலை 4.20 மணிக்கும், இப்தார் மாலை 6.53 மணிக்கும் நிகழ்த்தப்படும். அதாவது ரமலான் மாதம் முடியும் நேரத்தில், நோன்பு நேரம் 14 மணி 33 நிமிடங்களாக அதிகரித்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.