உலகின் மிகவும் பரபரப்பான மற்றும் அதிகளவிலான பயணிகளை கையாள்வதில் உலகளவில் முதலிடம் வகிக்கும் துபாயின் சர்வதேச விமான நிலையம், பராமரிப்பு பணிக்காக அதன் இரண்டு ஓடுபாதைகளில் ஒன்றை தற்காலிகமாக மூடவுள்ளதாக அறிவித்திருந்தது. கோடை காலத்திற்கு முன்னதாக மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த பராமரிப்பு பணியானது வரும் மே மாதம் தொடங்கி 45 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் விமான நிலையத்தின் (DXB) வடக்கு ஓடுபாதை 45 நாட்களுக்கு மூடப்படும் பட்சத்தில், சில விமானங்கள் துபாய் வேர்ல்ட் சென்ட்ரலுக்கு (DWC) திருப்பி விடப்படும் என கூறப்பட்டுள்ளது.
மே 9 முதல் ஜூன் 22 வரை ஓடுபாதை மூடப்பட்டு, முழுமையான சீரமைப்பு மேற்கொள்ளப்படவிருக்கும் நிலையில், அனைத்து விமான நிறுவனங்களும் அதற்கேற்றவாறு விமான பயணங்களை திட்டமிடுவதற்காக இந்த முன்கூட்டிய அறிவிப்பை வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து flydubai வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, DWC இலிருந்து பயணிக்கும் பயணிகள் விமான நிலையத்தில் இலவச பார்க்கிங்கை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த கால கட்டத்தில் DWC இலிருந்து 34 இடங்களுக்கு விமானங்களை இயக்குவதாக flydubai அறிவித்துள்ளது.
கூடுதலாக, சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) DXB மற்றும் DWC இல் உள்ள அனைத்து டெர்மினல்களுக்கும் இடையே ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒரு இலவச பேருந்து சேவையை வழங்கும் என தெரிவித்துள்ளது.
அத்துடன் சரியான தகவலை உறுதி செய்வதற்காக, பயணிகள் தங்கள் புறப்பாடு மற்றும் வருகை விமான நிலையங்களை பயணத்திற்கு முன்பே சரிபார்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.