UAE: தூசியுடன் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வாகனங்களின் அபராதங்களை உடனே செலுத்த அறிவுறுத்தல்..!! மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை..!!
அபுதாபியில் உள்ள அதிகாரிகள் தூசி மற்றும் அழுக்கு படிந்த நிலையில் வைத்திருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து சட்ட நடவடிக்கையை தவிர்க்க அவற்றை அப்புறப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
அபுதாபியில் இருக்கும் முசாஃபா பார்க்கிங் லாட் M18 மற்றும் அபுதாபி நகரின் பல அடுக்கு மாடி கட்டிட பார்க்கிங்கில் ஒரு மாதத்திற்கும் மேலாக கைவிடப்பட்ட அல்லது அழுக்கு படிந்த நிலையில் நிறுத்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் சட்ட நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக நிலுவையில் உள்ள கட்டணத்தை செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது.
அபுதாபியில் உள்ள நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையில் உள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) புதன்கிழமை இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் அனைத்து வாகன உரிமையாளர்களும் தங்கள் வாகனத்தின் தரவைப் புதுப்பிக்கவும், நிலுவையில் உள்ள கட்டணங்களைச் செலுத்தவும், லாரிகள் நிறுத்தும் இடம் மற்றும் பல மாடி கட்டிட பார்க்கிங்கின் விதிகளை பின்பற்றுமாறு அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் ITC அழைப்பு விடுத்துள்ளது.
“இந்த விதிகளை புறக்கணிப்பது, அமீரகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து தேவையான சட்ட நடவடிக்கைகளை ITC எடுக்க வழிவகுக்கும்” என்று ITC அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
தங்கள் வாகனங்களை பதிவு செய்யாமல் அல்லது தேவையான கட்டணம் செலுத்தாமல் நீண்ட காலமாக வாகனங்களை நிறுத்தும் அனைத்து வாகன உரிமையாளர்களும் பொது வாகன நிறுத்துமிடங்களின் விதிகள் மற்றும் விதிமுறைகளை கடைபிடிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விதிமுறைகளை கடைபிடிக்க தவறினால், நோட்டீஸ் காலம் முடிவடைந்தவுடன், புறக்கணிக்கப்பட்ட வாகனங்களை ஏலத்தில் விற்பது வரை சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் ITC தெரிவித்துள்ளது.