ஷார்ஜா நகர முனிசிபல் கவுன்சில் மற்றும் ஷார்ஜா நகர முனிசிபாலிட்டி ஆகியவை ஒன்றிணைந்து ஷார்ஜாவில் இருக்கும் முவைலே பகுதியில் புதன்கிழமை 7,400 சதுர மீட்டர் பரப்பளவில் முவைலே பூங்காவைத் திறந்து வைத்துள்ளன. முவைலே பகுதியின் மக்கள்தொகை மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கு ஏற்ப இந்த புதிய பூங்கா திறக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அமீரகத்தின் உச்ச கவுன்சில் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான மாண்புமிகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்களின் உத்தரவுகளுக்கு இணங்க இந்த பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பூங்காவில் சுமார் 3,300 சதுர மீட்டர் பரப்பளவில் பசுமையான மரம், செடிகளை கொண்டுள்ளது.
அத்துடன் 4,000 க்கும் மேற்பட்ட மலர்களால் இந்த பூங்கா அலங்கரிக்கப்பட்டுள்ளது மற்றும் 2,200 க்கும் மேற்பட்ட செடிகள் வளர்க்கப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் ரப்பர் தரையுடன் கூடிய குழந்தைகள் விளையாடும் பகுதியை இந்த பூங்கா கொண்டுள்ளது. மேலும் நடைபயிற்சி மற்றும் ஓடுவதற்கு ஒரு டிராக், பல பயன்பாட்டு விளையாட்டு மைதானம் மற்றும் நீரூற்று ஆகியவற்றையும் கொண்டுள்ளது. பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் ஓய்வெடுப்பதற்கென 40 இருக்கைகளையும் நகராட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.