அபுதாபியில் உள்ள காவல் துறையினர், அபுதாபி சிட்டி மற்றும் அல் அய்னில் உள்ள பல்வேறு போக்குவரத்து சிக்னல்களில் தினமும் 2,500க்கும் மேற்பட்ட உணவு மற்றும் பானங்களை வாகன ஓட்டிகளுக்கு ரமலான் முழுவதும் இஃப்தார் சமயத்தில் வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட “ஃபீட் அண்ட் ரீப் ரமலான் (Feed and Reap Ramadan)” முயற்சி அபுதாபி காவல்துறை மற்றும் அப்ஷர் யா வதன் (Absher Ya Watan) மூலம் செயல்படுத்தப்படும் மற்றும் அபுதாபி சிட்டி மற்றும் அல் அய்னில் உள்ள சில பரபரப்பான சாலைகளை உள்ளடக்கும் என கூறப்பட்டுள்ளது.
இது பற்றி தெரிவிக்கையில், “நோன்பு திறக்க வீட்டிற்கு வர தாமதமாகும் ஓட்டுநர்களுக்கு இஃப்தார் உணவை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இஃப்தார் சாப்பிட விரைந்து செல்ல விரும்புவதால் இதன் மூலம் அவர்கள் வேகமாகச் செல்வதைத் தவிர்க்க முடியும்” என்று புரோட்டோகால் மற்றும் உறவுகள் துறையைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் சுல்தான் அப்துல்லா பவாசீர் கூறியுள்ளார்.
மேலும் “இந்த முயற்சி ரமலான் மாதத்தின் உணர்வைப் பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல், இஃப்தார் நேரத்தில் வேகமாகச் செல்லும் ஓட்டுநர்களால் ஏற்படக்கூடிய சாலை விபத்துகளைத் தவிர்க்கவும் உதவுகிறது. புனித ரமலான் மாதம் முழுவதும் வாகன ஓட்டிகளுக்கு மொத்தம் 90,000 இஃப்தார் பாக்கெட்டுகள் வழங்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அபுதாபி மற்றும் அல் அய்னில் உள்ள ஆறு போக்குவரத்து சிக்னல்களில் வாகன ஓட்டிகளுக்கு இப்தார் உணவை தன்னார்வலர்களுடன் இணைந்து போக்குவரத்து ரோந்துப் பணியாளர்கள் விநியோகிப்பார்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
அபுதாபியில் உள்ள இடங்களில் அபுதாபி இஸ்லாமிக் பேங்க் சிக்னல், சிவில் டிஃபென்ஸ் ரோட் சிக்னல், முஷ்ரிஃப் மால் சிக்னல் மற்றும் பிரெஸ்டீஜ் அல் கலியா சிக்னல் ஆகியவை அடங்கும் என்றும் அல் அய்னில், அல் மக்காமி மற்றும் ஜாமி மால் சிக்னல்களில் இஃப்தார் உணவுகள் விநியோகிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ரமலானின் போது ஓட்டுநர்களுக்கு இஃப்தார் உணவை விநியோகிக்கும் முயற்சி அபுதாபி காவல்துறையால் பல அமைப்புகளுடன் இணைந்து பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது ஐக்கிய அரபு அமீரகத்தின் சமூக ஒற்றுமையின் வெளிப்பாடாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.