துபாய் EXPO சிட்டியில் கார்களுக்கு அனுமதி இல்லை.. பாதசாரிகளுக்காக உருவாகும் பிரம்மாண்ட நகரம்..!
கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் இல்லாத பாதசாரிகளால் மட்டுமே இயங்கக்கூடிய மனித மையமான நகரமாக EXPO சிட்டி அமையுள்ளதாக அதன் தலைமை மேம்பாடு அதிகாரி அஹ்மத் அல் காதிப் தெரிவித்துள்ளார், மேலும் இந்த நகரத்தில் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை ஏற்றிச் செல்ல (பக்கிஸ்களான) தள்ளுவண்டிகள் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து EXPO 2020 துபாயின் தலைமை மேம்பாடு அதிகாரி அஹ்மத் அல் காதிப் கூறுகையில், EXPO சிட்டி முழுமையாக பாதசாரிகளுக்கான நகரமாக மாற்றப்படும் என்றும் இந்த நகரில் சாஃப்ட் மொபிலிட்டி விருப்பங்கள் பயன்படுவதால் கார்கள் அனுமதிக்கப்படாது என்றும் கூறினார். குடியிருப்பாளர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் நகரமாக இத்திட்டத்தை EXPO குழு மதிப்பாய்வு செய்து வருவதாக அல் காதிப் தெரிவித்தார்.
முன்னதாக அமீரகத்தின் துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அறிக்கையில் கூறியுள்ளதாவது: துபாய் EXPO 2020 நடைபெற்ற இடத்தை புது நகரமாக மாற்ற இருப்பதாகவும், அது துபாயின் அழகை பிரதிபலிக்கும் பகுதியாகவும், உலகத் தரம் வாய்ந்ததாகவும் அமையும் என்றும் கூறினார்.
பாதசாரிகளால் மட்டும் இயங்கக்கூடிய EXPO சிட்டியில் இந்தியா, லக்சம்பர்க், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, மொராக்கோ மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் பெவிலியன்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.