அமீரகத்தில் கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் வாரத்தில் 3 நாட்கள் மழை பெய்யும்.. NCM தகவல்..!
அமீரகத்தில் கோடைகாலம் நேற்று துவங்கிய நிலையில் இனிவரக்கூடிய வார இறுதி நாட்களில் மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த இரண்டு நாட்களில் வெப்பநிலை 50ºC எட்டிய நிலையில் இக்கோடைகாலத்தில் ஒரு வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய வானிலை ஆய்வு மைய ஆய்வாளர், டாக்டர் அஹ்மத் ஹபீப் கூறுகையில், “அமீரகத்தில் வெப்பநிலை உயர்ந்து கொண்டிருக்கும் வேலையில் மழை மேகங்களும் வளர்ந்து வருகிறது, இதனால் இக்கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரிக்கும். முன்னதாக அபுதாபி, அல் ஐனில் பகுதிகளில் மழை பெய்யும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அத்துடன் நாட்டின் மேற்குக் கரையோரப் பகுதிகளில் காலை நேரம் பனி மூட்டத்துடனும் ஈரப்பதத்துடனும் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.
“அமீரகத்தில் 45ºC-க்கு மேல் அதிக வெப்பநிலை இருக்கும்போது மழை பெய்யக்கூடும். மேலும் கிழக்குப் பகுதியில் வெப்பச்சலன மேகங்கள் உருவாகி நாட்டின் உள் பகுதிகளுக்கு நகரும். கடந்த ஆண்டு துபாய், அபுதாபி மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு மழை மேகங்கள் சென்றடைந்தது போன்று இந்தாண்டு அல் ஐன், ராஸ் அல் கைமா மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு சென்றடையும்” என்று ஹபீப் கூறினார்.
அமீரகத்தின் கிழக்குப் பகுதியில் வரும் நாட்களில் சில வெப்பச்சலன மேகங்கள் உருவாகும் என்று NCM அறிவித்துள்ளதால், இன்று மற்றும் வார இறுதியில் மழைக்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. சமீபத்தில் கிழக்கு நோக்கி வெப்பச்சலன மேகங்கள் நகர்ந்ததால் நாட்டில் மழை பெய்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.