துபாயில் இனி ஒரு முறை பயன்படுத்தும் ஷாப்பிங் பைகளுக்கு கட்டணம்.. இன்று முதல் அமல்..!
ஜூலை 1 முதல், பிளாஸ்டிக், காகிதம், மக்கும் பிளாஸ்டிக் மற்றும் தாவர அடிப்படையிலான மக்கும் பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் அனைத்து ஒற்றை உபயோகப் பைகளுக்கும் 25 ஃபில்ஸ்கள் கட்டணம் விசூலிக்கப்படும் என்று துபாய் முனிசிபாலிட்டி அறிவித்திருந்தது. அதன் மாற்றாக 57 மைக்ரோ மீட்டர் தடிமன் கொண்ட பைகள் வழங்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் சமீபத்தில் முனிசிபாலிட்டி உத்தரவு விடுத்தது.
இந்த நிலையில் அனைத்துக் கடைகளும் ஒருமுறை பயன்படுத்தும் ஒவ்வொரு பைக்கும் 25 ஃபில்ஸ் கட்டணத்தைப் வசூலிக்க வேண்டும் என்று முனிசிபாலிட்டி அறிவித்துள்ளதால் ஜூலை 1 ஆம் தேதியான இன்று இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக நுகர்வோர் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துவதே இதன் முக்கிய குறிக்கோள் என்பதால், பைகளை இலவசமாக வழங்குவதற்கு கடைகள் கடமைப்பட்டிருக்காது என்று துபாய் முனிசிபாலிட்டி தெரிவித்தது.
“மேலும் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் தாராளமாக வீட்டிலிருந்தே ஏதேனும் பைகளை எடுத்து வரலாம். அதற்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. ஆனால், கடைகளில் பொருட்கள் வாங்கும்போது புதிய பை வாங்க விரும்பினால் அதற்கான கட்டணம் இதர பொருட்களின் பில்கள் வரிசையில் இணைக்கப்பட்டு 25 ஃபில்ஸ் வசூலிக்கப்படும் என்றும் கூறபட்டுள்ளது.
இந்த விதிகளை மீறும் கடைகள் மீது புகாரளிக்க, துபாயில் உள்ள பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் நுகர்வோர் பாதுகாப்பின் www.consumerrights.ae என்ற இணையதளம் அல்லது கால் சென்டர் எண் 600545555 மூலம் புகாரைப் பதிவு செய்யலாம்.