அமீரகத்தில் சமீபத்தில் நடைபெற்ற எமிரேட்ஸ் டிராவில் இந்திய வெளிநாட்டவர் மிலன் மகேஷ் ஜானி மற்றும் பாகிஸ்தான் நாட்டவர் முஹம்மது தாவூத் பட் ஆகியோர் எமிரேட்ஸ் டிராவின் இரண்டாவது பரிசை வென்றுள்ளனர். டிராவில் அவர்களது டிக்கெட் எண் ஏழு இலக்கங்களில் ஆறுடன் மட்டுமே பொருந்தியதால், முதல் பரிசை தவறவிட்டு இரண்டாவது பரிசான 250,000 திர்ஹம்களைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
கிடைத்துள்ள தகவல்களின் படி, இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மிலன் என்பவர், 2008 ஆம் ஆண்டு முதன்முதலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வசித்து வருகிறார். எக்ஸ்போ 2020 துபாய் மற்றும் துபாய் க்ரீக் ஹார்பர் போன்ற மார்க்கீ திட்டங்களில் (marquee projects ) கட்டுமானத் துறையில் இவர் பணியாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
மிலனின் கூற்றுப்படி, அவர் ஏற்கனவே எமிரேட்ஸ் டிராவில் சிறிய தொகைகளை வென்றுளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வெற்றி பற்றி கூறுகையில் “செப்டம்பர் 2021 இல் எமிரேட்ஸ் டிரா தொடங்கப்பட்டதில் இருந்து நான் பங்கேற்று வருகிறேன், அது எனக்கு ஒரு பழக்கமாக ஒட்டிக் கொண்டது, இதில் தற்போது இரண்டாம் பரிசை வெற்றி பெற்றதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று மிலன் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், டிராவில் அவருக்குக் கிடைத்த ரொக்கத் தொகையை, துபாய் அல்லது அபுதாபியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கான அட்வான்ஸ் பணமாக கொடுக்கத் திட்டமிட்டுள்ளார். மேலும், அவர் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஒரு ஸ்டார்ட்அப் தொழிலைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளார்.
இதே போல், ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்து வளர்ந்த பாகிஸ்தானியரான 30 வயதான முஹம்மது என்பவர், ஏற்கெனவே மூன்று எண்களைப் பொருத்தி சிறிய தொகைகளை வென்றிருக்கிறார். இந்நிலையில் தற்பொழுது அவர் இரண்டாம் பரிசை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.