UAE: சலூன், இறைச்சி கூடங்கள், லாண்டரி போன்றவற்றில் நடத்தப்பட்ட 73,000க்கும் மேற்பட்ட ஆய்வுகள்..!! பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை…!!
பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த அபுதாபி சிட்டி முனிசிபாலிட்டியின் பொது சுகாதாரத் துறை அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் 73,000க்கும் மேற்பட்ட ஆய்வுப் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் உள்ளூர் அதிகாரிகள் இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 73,095 ஆய்வு இயக்கங்களை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுப் பிரச்சாரங்கள் அபுதாபியில் உள்ள சலூன்கள், அழகு நிலையங்கள், லாண்டரிகே், ஜிம்கள், ஒர்க் ஷாப்கள், கழிவறைகள், நீச்சல் குளங்கள் மற்றும் இறைச்சி கூடங்கள் போன்ற மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடைய பல்வேறு சேவை மையங்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான தரவுகளின் படி, முனிசிபாலிட்டி செயல்படுத்திய ஆய்வுகளில், அழகு நிலையங்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு மையங்களுக்கு 37,250 ஆய்வுகள், பழுது மற்றும் பராமரிப்பு ஒர்க் ஷாப்புகளுக்கு 11,473 வருகைகள், லாண்டரி வசதிகளுக்கு 8,675 வருகைகள், கழிப்பறைகள் மற்றும் கட்டிடக் கட்டுப்பாடுகளுக்கு 9,969 வருகைகள், ஜிம் மற்றும் குழந்தைகள் பூங்காவிற்கு 4,240 வருகைகள் மற்றும் மூடப்பட்ட கல்லறைகளுக்கு 1,488 வருகைகளை ஆய்வு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, இந்த பிரச்சாரத்தில் மக்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அமுல்படுத்துதல் போன்றவற்றில் சர்வதேச தரத்தை கடைபிடிப்பதில் கவனம் செலுத்தப்பட்டதாக துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் பண்டிகைக் காலங்களில் முனிசிபாலிட்டி இறைச்சிக் கூடங்களின் திறனை விரிவுபடுத்தியுள்ளது. அதாவது, இந்த ஆண்டின் முதல் பாதியில் அல் ஷஹாமா தானியங்கு இறைச்சிக் கூடத்தில் 92,525 இறைச்சிகள், அல் வத்பா தானியங்கு இறைச்சிக் கூடத்தில் 20,866, அபுதாபி தானியங்கு இறைச்சி கூடங்கள் 76,472 மற்றும் பனி யாஸ் இறைச்சி கூடம் 120,040 உட்பட மொத்தம் 309,903 இறைச்சிகளை அபுதாபியின் இறைச்சிக் கூடங்கள் செயலாக்கியுள்ளன எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, உணவு பாதுகாப்பு அமைப்பு ISO 22000 சான்றிதழை ஏற்றுக்கொள்வதற்கான தேவைகளையும் இந்த காலகட்டத்திலேயே இத்துறையானது வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.