ADVERTISEMENT

துபாயில் அமையவுள்ள உலகின் இரண்டாவது மிக உயரமான கட்டிடம்..!!! எவ்வளவு உயரம் தெரியுமா..???

Published: 5 Sep 2024, 4:11 PM |
Updated: 14 Oct 2024, 7:00 PM |
Posted By: Menaka

துபாயில் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா அமைந்துள்ள நிலையில் தற்பொழுது உலகின் இரண்டாவது கட்டிடமும் துபாயில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. துபாயின் பிரதான சாலையான ஷேக் சையத் சாலையில் கட்டி முடிக்கப்படவுள்ள உலகின் இரண்டாவது மிக உயரமான கோபுரமான புர்ஜ் அஜிசியின் (Burj Azizi) உயரம் 725 மீட்டர் என்பதை எமிரேட்டில் உள்ள முன்னணி டெவலப்பரான அஸிஸி டெவலப்மென்ட்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

சுமார் 131-க்கும் மேற்பட்ட மாடிகளைக் கொண்டு கட்டப்பட்டு வரும் இந்த வானுயர் கட்டிடம், வருகின்ற பிப்ரவரி 2025 இல் விற்பனைக்கு வரும் என்றும், 2028 க்குள் பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வானுயர் கோபுரத்தில் ஏழு கலாச்சார கருப்பொருள்கள் மற்றும் பென்ட்ஹவுஸ் உட்பட பல்வேறு குடியிருப்புகள், 7 ஸ்டார் ஹோட்டல், அப்பார்ட்மெண்ட் மற்றும் ஹாலிடே ஹோம் ஆகியவை இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், நலவாழ்வு மையங்கள், நீச்சல் குளங்கள், சானா (sauna), தியேட்டர்கள், ஜிம்கள், மினி சந்தைகள், குடியிருப்பாளர் ஓய்வறைகள், குழந்தைகள் விளையாடும் பகுதி போன்ற பல வசதிகளையும் Burj Azizi வழங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவை தவிர, இந்த கோபுரத்தில் ஏழு தளங்களில் ஒரு சில்லறை விற்பனை மையம், ஒரு ஆடம்பர பால்ரூம் மற்றும் ஒரு பீச் கிளப் ஆகியவை அடங்கும் என்றும், இந்த கோபுரம் பல உயர்தர F&B விருப்பங்களையும், மற்ற தனித்துவமான வசதிகளையும் கொண்டிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதுமட்டுமின்றி, உலகின் மிக உயர்ந்த ஹோட்டல் லாபி, மிக உயர்ந்த நைட் க்ளப், மிக உயர்ந்த கண்காணிப்பு தளம், துபாயில் மிக உயர்ந்த உணவகம் மற்றும் மிக உயர்ந்த ஹோட்டல் அறை போன்றவை இருப்பதால் Burj Azizi பல உலக சாதனைகளைப் படைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இது குறித்து அஸிஸி டெவலப்மென்ட்ஸின் நிறுவனர் மற்றும் தலைவர் மிர்வைஸ் அஸிசி (Mirwais Azizi) பேசிய போது, புர்ஜ் அஜிசியில் சுமார் 6 பில்லியன் திர்ஹம்ஸ்க்கும் மேலாக முதலீடு செய்திருப்பதாகக் குறிப்பிட்டதுடன் இது ஷேக் சயீத் சாலையை மாற்றுவதற்கும், துபாயின் வானலையை புதியதாக உயர்த்துவதற்கும் ஒரு அர்ப்பணிப்பாகும் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், வானுயர் கோபுரத்தை கொண்டு வருவதற்கு அஸிஸி டெவலப்மென்ட்ஸ்க்கு துபாய் அதிகாரிகள் கொடுத்த ஆதரவுக்காக அமீரக துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel