குவைத் நாட்டின் மன்னராக இருந்த எமிர் ஷேக் சபா அல் அகமது அல் சபா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவிற்கு சிகிச்சை பெற சென்றதையடுத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 91 வயதை அடைந்த மறைந்த குவைத் நாட்டின் மன்னர் எமிர் ஷேக் சபா அல் அகமது அல் சபா அவர்களின் உடல் தற்பொழுது அமெரிக்காவில் இருந்து குவைத் வந்தடைந்துள்ளதாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
குவைத்தில் இன்று (புதன்கிழமை) முதல் பதவிக்கு வந்த புதிய ஆட்சியாளரான எமீர் ஷேக் நவாஃப் அல் அஹ்மத் அல் சபா அவர்கள், அவரது சகோதரர் மறைந்த எமிர் ஷேக் சபா அவர்களின் உடலைப் பெற்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, தேசிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மர்சூக் அல் கானிம் மற்றும் பிரதமர் ஷேக் சபா அல் கலீத் அல் சபா ஆகியோர் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த குவைத் நாட்டின் மன்னர் உடலானது, தனது சகோதரர், தேசிய காவல்படையின் துணைத் தலைவர் ஷேக் மிஷால் அல் அஹ்மத் அல் சபா, ஷேக் முபாரக் அல் ஜாபர் அல் சபா மற்றும் ஷேக் நாசர் அல் சபா அல் அஹ்மத் அல் சபா ஆகியோருடன் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் மறைவை தொடர்ந்து குவைத்தில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும் மற்ற வளைகுடா நாடுகளில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
