ADVERTISEMENT

UAE: 65 மீட்டர் உயரத்தில் பணிபுரியும் போது கிரேன் ஆபரேட்டருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு..!! பத்திரமாக மீட்ட காவல்துறையினர்..!!

Published: 12 Oct 2020, 12:04 PM |
Updated: 12 Oct 2020, 12:19 PM |
Posted By: admin

துபாயில் தனது பணியின் போது மாரடைப்பால் பாதிக்கப்பட்ட கிரேன் ஆபரேட்டர் ஒருவரை துபாய் காவல்துறையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. துபாயில் உள்ள ஜபேல் அலி துறைமுகத்தில் (Jabel Ali Port) 65 மீட்டர் உயரத்தில் கிரேனில் நின்று பணிபுரிந்த நபர் திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென ஏற்பட்ட இந்த பாதிப்பையடுத்து துபாய் காவல்துறைக்கு அவசர அழைப்பு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாய் காவல்துறையின் கடினமான பணிகள் பிரிவின் தலைவர் (head of the difficult missions section at the Dubai Police) லெப்டினென்ட் கலோனல் யஹ்யா உசேன் முஹம்மது அவர்கள் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், “துபாய் சிவில் பாதுகாப்பு (Dubai Civil Defence), துபாய் கார்ப்பரேஷன் ஃபார் ஆம்புலன்ஸ் சர்வீசஸ் (Dubai Corporation for Ambulance Services) மற்றும் துபாய் காவல்துறையில் உள்ள நில மீட்புக் குழு ஆகியோரின் ஒத்துழைப்புடன், எங்கள் அணிகள் உடனடியாக ஜபேல் அலி துறைமுகத்தில் உள்ள இராட்சத கிரேனில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நபரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டன” என்று கூறினார்.

மீட்புக் குழுக்கள் கிரேன் உச்சியில் ஏறி, அந்த நபரின் உடல் நிலையை சரிப்படுத்த தேவையான முதலுதவி அளித்து, பின்னர் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அவர் மேலும் கூறுகையில், “கிரேனில் இருக்கும் மின்சார லிப்ட் உடைந்ததால் அவரை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மீட்டு வருவது ஒரு சவாலாக இருந்தது. எங்கள் தொழில்நுட்பக் குழு முதலில் லிப்டை சரிசெய்து அதை அவர்களே (manually) இயக்க வேண்டியிருந்தது. பின்னர், அந்த நபரை நாங்கள் முதல் மாடிக்கு அழைத்து சென்று அங்கு அவர் ஒரு ஸ்ட்ரெச்சரில் வைக்கப்பட்டு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டார்” என்றும் அவர் கூறினார்.