அமீரக செய்திகள்

UAE: 500 பேர் மட்டுமே தங்க அனுமதிக்கப்பட்ட தொழிலாளர் தங்குமிடங்களில் வசித்து வந்த 800 பேர்.!! அதிகாரிகள் எச்சரிக்கை..!!

ஷார்ஜாவில் அமைந்துள்ள தொழில்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பல தொழிலாளர்களின் தங்குமிடங்கள் வரையறுக்கப்பட்ட தொழிலாளர்கள் எண்ணிக்கையை மீறி விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 500 பேர் மட்டுமே தங்குவதற்கு கட்டப்பட்ட தொழிலாளர் இருப்பிடங்களில் தற்போது 800 பேருக்கும் அதிகமானவர்கள் வசிப்பதாக ஷார்ஜாவின் அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு அதிகாரிகள் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.

ஷார்ஜாவின் அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு, கோவிட் -19 பரவுவதை எதிர்த்து பாதுகாப்பு சோதனைகளை முடுக்கிவிட்டதன் எதிரொலியாக பல்வேறு இடங்களிலும் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது. இந்த ஆய்வின் ஒரு பகுதியாக தொழிலாளர்களின் தங்குமிடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இந்த கடுமையான விதி மீறல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த தங்குமிடங்களில் இருக்கும் சில அறைகளில் வரையறுக்கப்பட்டுள்ள அளவை விடவும் 60 சதவீதம் அதிகமான எண்ணிக்கையில் தொழிலாளர்கள் வசித்துவந்ததும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த செய்தி குறித்து ஷார்ஜாவின் அவசர மற்றும் நெருக்கடி மேலாண்மை குழுவின் தலைவர் பிரிக் அகமது சயீத் அல் நூர் அவர்கள் கூறுகையில், நிலையான தொழிலாளர் தங்குமிடங்களில் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கக்கூடாது என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும் ஒரே அறையில் நான்கு பேர் மட்டுமே தங்கியிருக்க வேண்டும் என்றும், இந்த வரம்பு கொரோனா பரவலுக்கு முன்பே அமலில் இருக்கும் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது உடல் ரீதியான சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான ஒரு முக்கிய முன்னெச்சரிக்கையாக மாறியுள்ளது, எனவே ஷார்ஜாவில் உள்ள அனைத்து தங்குமிடங்களும் வரம்பையும், மற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கண்டிப்பாக அமல் படுத்துகின்றதா என்பதை குழு உறுதி செய்து வருகிறது எனவும் பிரிக் அல் நூர் கூறியுள்ளார்.

மேலும் ஆய்வாளர்ளின் இந்த தொடர் ஆய்வின் போது, அமீரகத்தின் தொழில்துறை பகுதிகளில் ​​மின்சாரம் இல்லாத சில தங்குமிடங்களையும் அவர்கள் கண்டுள்ளனர்.
தொற்றுநோய் காரணமாக தங்களின் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய சில தொழில் நிறுவனங்கள், தங்கள் தொழிலாளர்களுக்கான மின்சார இணைப்பை துண்டித்துவிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இது விதிமுறைகளின் மற்றொரு பெரிய மீறலாகும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!