குவைத் அமைச்சரவையானது வெளிநாட்டில் இருக்கும் குவைத்தில் பணிபுரியும் வீட்டு தொழிலாளர்கள் மீண்டும் குவைத் திரும்புவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து அரசின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் தாரக் அல் மெஸ்ரேம் அவர்கள் கூறுகையில், அதிகாரிகளால் முன் வைக்கப்பட்ட வீட்டு தொழிலாளர்கள் மீண்டும் குவைத் திரும்புவதற்கான திட்டத்தை குவைத் அமைச்சரவையானது ஒப்புதல் அளித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அதற்குரிய சட்ட ரீதியிலான செயல்முறைகளை முடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இத்திட்டத்தின்படி, குவைத் திரும்பும் அனைத்து வீட்டு தொழிலாளர்களும் கட்டாயமாக இரு வாரத்திற்கு சிறப்பு தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த தொழிலாளர்களின் ஸ்பான்சர்கள் அவர்கள் தங்கள் தொழிலாளிகளின் விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்து அவர்கள் குவைத் ஏர்போர்ட் வந்தடைந்ததும் அவர்களை தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்து செல்லும் பணியை நிர்வகிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த திட்டம் செயல்படுத்தப்படுமேயானால், 4 அல்லது 5 மாதங்களுக்குள்ளாகவே சுமார் 80,000 தொழிலாளர்கள் குவைத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்படி, வரும் டிசம்பர் 10 முதல் இந்தியா உட்பட வெளிநாடுகளில் இருந்து குவைத்தில் பணிபுரியும் வீட்டு தொழிலாளர்கள் குவைத் திரும்பலாம் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதனை தொடர்ந்து, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் குவைத் நாட்டிற்கு சொந்தமான விமான நிறுவனங்களுடன் இணைந்து குவைத் அரசால் தடை செய்யப்பட்டிருக்கும் நாடுகளில் இருந்து வரும் வீட்டு தொழிலாளர்களுக்கான விமானப் பயணத்திற்கான கட்டணங்களை நிர்ணயம் செய்துள்ளது.
குவைத் நாட்டை சேர்ந்த செய்தி நிறுவனமான அல் கபாஸ் செய்தித்தாள் கூற்றுப்படி, இந்தியா, இலங்கை, நேபால், பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய 5 நாடுகளுக்கான விமானப் பயணத்திற்கான விலை ஒரு நபருக்கு 350 குவைத் தினாராக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலையானது விமான டிக்கெட், தனிமைப்படுத்தலுக்கான தங்கும் இடம், PCR சோதனை மற்றும் சாப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, இந்தியாவில் இருந்து குவைத் வருவதற்காக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள விமான டிக்கெட்டிற்கான விலை 110 தினார்ஸ் என்றும் இலங்கைக்கு 145 தினார்ஸ் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், ஒரு நாளைக்கு 600 நபர்கள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.