கடந்த வியாழக்கிழமை இரவு, ஷார்ஜாவின் அல் மஜாஸ் 2 பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 46 வயது இந்தியப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஷார்ஜா அதிகாரிகளின் கூற்றுப்படி, 11 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் எட்டாவது மாடியில் உள்ள அந்தப் பெண்ணின் குடியிருப்பில் இரவு 10:45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த நேரத்தில் அவர் ஒரு சிறப்பு சடங்கு செய்து கொண்டிருந்ததாகவும், இதனால் அந்தப் பெண் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த சிவில் பாதுகாப்பு, காவல்துறை மற்றும் தேசிய ஆம்புலன்ஸ் பிரிவுகள் அவசரநிலையைக் கட்டுக்குள் கொண்டு வர தீவிரமாக செயல்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். ஆனால், விபத்தில் சிக்கிய அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வகத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தின் போது பெண்ணின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயை அதிகாரிகள் கட்டுப்படுத்தியதுடன், இது மற்ற பிரிவுகளுக்கு பரவாமல் தடுத்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் ஒவ்வொரு தளத்திலும் 12 அடுக்குமாடி குடியிருப்புகள் இருந்தாலும், இறந்தவரின் வீடு மட்டுமே சேதமடைந்தது என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து, எட்டாவது தளம் முழுவதும் குடியிருப்பாளர்களை வெளியேற்றி பாதுகாப்பு நடவடிக்கையாக, சீல் வைக்கப்பட்டது, மேலும் மதிப்பீடுகள் முடியும் வரை குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குள் திரும்ப அனுமதிக்கப்படவில்லை. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தீ விபத்துக்கான காரணத்தையும், கட்டிடத்தில் ஏதேனும் பாதுகாப்பு மீறல்கள் உள்ளதா என்பதையும் கண்டறிய முழு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel
