அபுதாபியின் அல் அய்னில் உள்ள ஒரு பேக்கரியில் சாப்பிட்ட வாடிக்கையாளர் ஒருவர் ‘ஃபுட் பாய்சனிங்’ காரணமாக நோய்வைப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அந்த கடையை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக அபுதாபி வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையம் (ADAFSA) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
அல் முதரேத் (Al Mutaredh) பகுதியில் அமைந்துள்ள CN-1102470 உரிம எண்ணின் கீழ் இயங்கும் அல் ஸ்வைதா மாடர்ன் பேக்கரிஸ் (Al Swaida Modern Bakeries) என்ற நிறுவனத்தின் சுகாதாரமற்ற உணவினால் ‘ஃபுட் பாய்சனிங்’ ஏற்பட்டதாக வழக்கு பதிவானதை அடுத்து, ADAFSA அதிகாரிகள் பேக்கரியை ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில் பேக்கரி முக்கிய உணவு பாதுகாப்பு விதிகளை மீறியதாக அதிகாரிகள் கண்டறிந்தனர். உணவைக் கையாளுதல், தயாரித்தல் மற்றும் சேமிப்பதில் பாதுகாப்பற்ற நடைமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
அமீரகத்தில் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் மற்றும் உணவுப் பாதுகாப்பு தரநிலைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அனைத்து மீறல்களும் சரிசெய்யப்படும் வரை மற்றும் அது எமிரேட்டின் அங்கீகரிக்கப்பட்ட உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வரை பேக்கரி மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அபுதாபியில் உணவு தொடர்பான 2008 ஆம் ஆண்டின் சட்ட எண் (2) இன் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது, இது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளுடன் கண்டிப்பாக இணங்குவதை கட்டாயமாக்குகிறது.
உயர் உணவுப் பாதுகாப்புத் தரங்களைப் பராமரிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை ஆணையம் மீண்டும் உறுதிப்படுத்தியது, மேலும் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அனைத்து உணவு நிறுவனங்களும் முறையான கையாளுதல் மற்றும் சேமிப்பு நடைமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel