ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கு எதிராக சினோபார்ம் நிறுவனத்தின் தடுப்பூசியானது பயன்பாட்டுக்கு வந்ததை தொடர்ந்து, கொரோனாவிற்கு எதிரான இரண்டாவது தடுப்பூசியாக ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி பிரச்சாரமானது இன்று முதல் துவங்கும் என்று துபாய் அரசு தெரிவித்திருந்தது.
அதன்படி, தடுப்பூசிகள் பெல்ஜியம் நாட்டிலிருந்து துபாயை வந்தடைந்ததை தொடர்ந்து, இன்று முதல் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை (Pfizer-BioNTech vaccine) இலவசமாக குடியிருப்பாளர்கள் போட்டுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தடுப்பூசி பெற அங்கீகாரம் பெற்ற சுகாதார மையங்களுடன் சந்திப்பை முன்பதிவு செய்வதற்கு முன்னர் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள 800342 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கும் போது, தடுப்பூசியானது மூத்த அமீரக குடிமக்கள், செல்லுபடியாகும் விசா வைத்திருக்கும் துபாய் குடியிருப்பாளர்கள் மற்றும் நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகியோருக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பது முதலில் தெரிவிக்கப்படுகிறது.
கூடுதலாக, துபாய் சுகாதார ஆணையத்தின் (DHA) அதிகாரி ஒருவர் கூறுகையில், தடுப்பூசிக்கான முன்பதிவு செய்ய விரும்பும் குடியிருப்பாளர்கள் அப்பாய்ண்ட்மென்ட் பெறுவதற்கு முதலில் அவர்கள் மருத்துவ பதிவு எண்ணை (MRN) வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
MRN இல்லாதவர்கள் தடுப்பூசி பெறுவதற்கான முன்பதிவு செய்ய தங்களின் மொபைல் எண்ணைக் குறிப்பிட்டு அத்துடன் எமிரேட்ஸ் ஐடியின் (முன் மற்றும் பின்) புகைப்பட நகலை பதிவேற்றம் செய்து info@dha.gov.ae என்ற ஈமெயில் முகவரிக்கு மெயில் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் துபாயில் உள்ள ஜபீல் (Zabeel) அல் பார்ஷா (Al Barsha), நாத் அல் ஹம்மர் (Nad Al Hammar) மற்றும் அல் மம்சார் (Al Mamzar) ஆகிய நான்கு சுகாதார மையங்களில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி கிடைக்கப் பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் சினோபார்ம் தடுப்பூசி 86 சதவிகிதம் பயனுள்ளதாக இருந்தாலும், அமீரக அதிகாரிகளின் கூற்றுப்படி, இரண்டு டோஸ் (dose) கொடுத்ததன் பின்னர் ஃபைசர் தடுப்பூசியின் சோதனை முடிவுகள் கொரோனாவிற்கெதிராக 95 சதவிகித செயல்திறன் மிக்கதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தியதன் பின்னர் இரண்டாவது டோஸ் 21 நாட்களுக்குப் பிறகு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.